சனி, 14 மார்ச், 2009

ஆதித் தமிழர் மெய்யியல்

ஆதித் தமிழர் மெய்யியல்
ஆதி. சங்கரன்

முதன்முதலாக உலக மாந்தர்க்கு - மாந்தத் தொகுதிகட்கு - அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களைத் தகுந்த தருக்க நெறிகளோடு படைத்து வழங்கிய முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத் தமிழனே என்பதற்குப் பலவகைச் சான்றுகளும் மேற்கோள்களும் இருப்பினும் அவற்றைச் சரியான முன்வைப்பு முறையில் தெளிவு படுத்த வேண்டியது நமது கடனேயாம். எனவே, ஆதித் தமிழரின் மெய்யியல் கோட்பாடுகளையும், அவை வழங்கி வந்த பல்வேறு நிலத்திணையிலிருந்து இன்று அடைந்துள்ள திரிவாக்க வளர்ச்சி பற்றியும், குமுகத்தில் இன்று அக் கோட்பாட்டிற்கு உள்ள இயங்கியல் நிலை குறித்தும் குமுகத்தின் பார்வையில் இப்பழம் பெரும் மெய்யியல் அறிவு இன்றைக்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பது பற்றியும், இன்றைய நிலையில் அக்கோட்பாடு பெற்றுள்ள வரைவு மற்றும் சமயப் போர்வைகள் குறித்தும் பண்டைய செய்திகளைத் தற்போதைய நடைமுறையுடன் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் நமதேயாம்.
பழந்தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து மெய்யியல் கோட்பாடுகளை நாம் பின்வரும் பகுப்புக்களில் எடுத்துரைக்கலாம்.

1. இடத்திணையின் அடிப்படையில் முன்வைத்தல்.
2. மெய்யியல் படிநிலைகளின் அடிப்படையில் முன்வைத்தல்.
3. மருவிய வழக்கு முறையில் அயன்மைத் தோற்றம் பெற்றவை.
என்ற மூவகை முன்வைப்பில் காண்போம்.

முதலாவதாக,
இடத்திணையின் அடிப்படையில் பார்க்கின்ற போது தமிழர் தாம் வாழ்ந்த நிலத்தினைக் குறிஞ்சி முதல் பாலையீறாக ஐவகையாகப் பகுத்தனர்.
குறிஞ்சியில் முருகன் தெய்வமாகவும்,
முல்லையில் திருமால் தெய்வமாகவும்
மருதத்தில் இந்திரன் தெய்வமாகவும்
நெய்தலில் வருணன் தெய்வமாகவும்
பாலையில் கொற்றவை தெய்வமாகவும்
கருப்பொருள் இலக்கணம் கண்டனர். இன்றைக்குச் செம்மையாகப் பரவியிருக்கும் சிவனியமும், இந்து என்ற சமயமும் பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் யாண்டும் காணப் பெறாத ஒன்று.

குறிஞ்சி நிலத் தெய்வமாகக் கருதப்பட்ட முருகனுக்கு, இரண்டு மனைவியரும், வினாயகர் போன்ற உடன் பிறந்தோரும் இருந்ததாக சங்க இலக்கியச் சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கௌமார சமயம் எனும் நிலைக்கு முருக வழிபாடு வந்த பின் பிற்கால நாடக ஆசிரியர்களின் புலமையாலும், திரைத்துறையின் பக்தித் திரைப்படங்களாலும் குறிஞ்சி நில முருகனின் பொதுவான வடிவம் காண்போர் மயங்கும் வண்ணம் இவ்வாறு திரிக்கப் பட்டுள்ளது.

முல்லை நிலத்தின் திருமாலும் இரண்டு மனைவியர்களுடன்தான் பிற்காலத்தில் மாற்றம் செய்யப் பட்டார். ஆழ்வார்களும், சமயாசிரியர்களும் (திருமாலை உயர்த்திப் பேசுவதாக நினைத்து) அவர் செய்த்தாகப் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தியதில் சங்க இலக்கியங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதனை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

அடுத்ததாக, மருத நிலத்தின் இந்திரன் ஆசீவகச் சமயத்தின் ஒருபடிநிலைத் தெய்வம் (அதனைப் பின்னர்க் காண்போம்.) ஆனால் அந்த இலக்கியச் சான்று கொண்ட மருத நிலத் தெய்வத்தைக் கூடப் பின்னர் வந்த வந்தேறிக் கட்டுக் கதைகள் இழிவு செய்தன. அவரது உடல் முழுக்கவும் பாலுறுப்பு முளைத்ததாகக் கூறி நமது தமிழ்த் தெய்வத்தினை வஞ்சித்து ஏசியது, ஒரு காலத்தின் கொடுமை.

நெய்தல் நிலத்து வருணனோ ஒரு துணைத் தெய்வமாகப் படியிறக்கம் செய்யப்பட்டு திசைமக்கள் எண்மரில் ஒருவனாக முதன்மை யிழந்து போகச் செய்தனர்.

பாலை நிலத்துக் கொற்றவை நமது முன்னோர்களின் தாய்த் தெய்வ வழிபாட்டிற்கு மூல வடிவமானவள். ஆனால் அவளை அடங்காப் பிடாரி என்றும், தீமையே செய்யும் இரக்கமற்றவள் என்றும் வைதீக வந்தேறிக் கதைகள் உருவகப் படுத்தின. இவ்வாறாக இடத்திணையின் பிரிவாக நாம் காணும் ஐவகை நிலத்தின் தெய்வங்களையும் வைதீக வல்லடியாளர்கள் சிறுமைப் படுத்தி இழித்துக் காட்டியுள்ளனர். இவற்றை அப்படியே நாம் நம்பி ஏற்றுக் கொள்ளும் இழிநிலைக்கு நம்மையும் கொண்டு வந்து, அவ்வாறு அறிவிலியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு ‘இந்துக்கள்’ என்றொரு புதுச்சொல் ஒன்றை நம் தலைமீது சுமத்தினர்.

ஒரு சமயம் என்று சொன்னால் அது தோன்றிய இடம், பல்வேறு மாற்றங்களுடன் அது வளர்ந்த நிலை, அதன் பதிவுகள், சமூக அடையாளங்கள் இன்னோரன்ன பிறவும் தான் அது ஒரு சமயம் என்பதனை வரையறுக்கும். ஆனால் இந்த இந்து என்கிற சமயத்துக்கு ஏதேனும் தோற்ற இடமும், காலமும் உண்டா? இதனைப் பின்பற்றிய மாந்தத் தொகுதியினர் யார் என்ற விவரமும் உண்டா? கூற முடியாது.

இவ்வாறு தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்ட தெய்வங்களைப் பாலியல் குற்றவாளிகளாக உருவகப் படுத்தும் வல்லடிச் சமயமே இந்து என்ற சமயம். இதன் மூலம் தமிழனின் தொன்மங்களைக் கொச்சைப் படுத்தினர். நமது விழுமியங்களைத் தின்றே வைதீகம் வளர்ந்தது. (அது மட்டுமின்றிச் சமய மறுப்பாளர்கள் கூடத் தாங்கள் விரும்பா விட்டாலும் ஏதோ ஒரு சமயப் பகுப்புக்குட் படுத்தப் படுகின்றனர். தான் தனக்கு விரும்பிய கருத்துக்கொப்பத் தனது சமயத்தினைத் தேர்ந்தெடுக்கும் அறிவு உரிமையும் சமய விடுதலையும் நமக்கு இன்றளவில் வழங்கப் படாமையையே அது காட்டுகிறது.)

நாம் ஒரு பெரிய அறிவியல் மரபில் வந்த பண்பாளர்கள். எனவே, வைதீக வந்தேறிகளின் பொய்க்கதைகளை நமது தருக்க அறிவு ஏற்றுக் கொள்வதில்லை. இந்த இக்கட்டான சூழலில் நமது தொன்மையான மெய்யியல் கூறுகளை வந்தேறிச் சமயங்கள் விழுங்கி விட்டன அல்லது இருட்டடிப்புச் செய்தன. இத்தகு கையறு நிலையில் மெய்யியல் தருக்க முறைகளும் மறைந்தன. இத்தகையதோர் அறிவு மயக்க நிலையில் வைதீகத்தோடு தங்களைச் சமாதானப் படுத்திக் கொண்டு போக முடியாத பகுத்தறிவாளர்கள் மெய்யியலையே புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். இப்படி இறைமறுப்பாளர்களானவர்கள் கூடப் பழைய பண்பாட்டுக் கூறுகளுக்குப் புறம்பாக ஒருபோதும் நடப்பதில்லை, ஒழுக்கக் கேடுகளை ஆதரிப்பதில்லை என்பதிலிருந்தே நமது பண்பு நேர்மையினை வைதீகர்கள் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். மெய்யியலை ஆதரிப்போர் இறைவன் பெயரால் நல்லன செய்க என்பதும், நமது இறை மறுப்பாளர்கள் கடவுள் பெயரால் அல்லன செய்யற்க என்பதும் ஒரே கருத்தின் மறுதலை வடிவமே. இதிலிருந்தே நாம் மெய்யியலில் எந்த நிலையினை ஏற்றுக் கொண்டாலும் ஒரே சால்பினராக இருக்கிறோம் என்பது தெளிவாக விளங்கும்.

இவ்வாறு பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

இரண்டாவதாகப் படிநிலை வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கின்ற போது,
1. அறிவு வளர்ச்சியில் படிநிலைப் படியும்,
2. மெய்யியல் வளர்ச்சியில் படிநிலையிலும்
இருவகைப் பகுப்புகளில் ஆதித் தமிழரின் மெய்யியலை ஆய்வோம்.
முதலாவதாக அறிவு வளர்ச்சிப் படிநிலையில் துவக்கக் காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடும் குறிப்பிடத் தக்கது. தாயாரம்மாள் என்று பெயர் வைக்கும் முறையும் அண்மைக் காலம் வரையில் தொடர்ந்தது. “சப்த மாதாக்கள்” என்று கன்னியர் எழுவரின் வழிபாட்டு வழக்கம் இன்னமும் சில குடிகளிடையே உண்டு. ஏழு கன்னியரில் ஒருவரான அம்பிகா எனும் அம்பிகையே சமணத்தின் இயக்கியருள் ஒருவர். அம்பிகா எனும் அம்பிகையே பின்னாளில் சிவனியக் கலப்பில் சக்தி வழிபாட்டில் தனிப் பெரும் தெய்வமாக சிவனின் மனைவியாக மாற்றம் பெற்றாள்.

பழங்குடிகளுள் ஒரு பிரிவினரான இருளர் இன மக்கள் இன்னமும் கன்னியர் வழிபாடு செய்து வருகின்றனர். அவர்களிடையே ‘யட்சினி’ எனும் பெண் தெய்வம் குறிசொல்லும் வழிபாடும் உண்டு. இந்த யட்சினி எனும் தெய்வத்தின் பெயரால் இன்றும் பலர் குறி சொல்கின்றனர். இந்த யட்சினி யார் என்று பார்ப்போம்.

கணி நந்தாசிரியனுக்கு இயக்கன் என்றொரு பெயரும் உண்டு. மொழி முதல் வாரா எழுத்துக்களின் முன் எழுதப்படும் ‘இ’கரம் ஒலி பெறாது. எனவே இராமன் என எழுதி ராமன் என ஒலிப்பது போல் அவ்வழக்கிலேயே இயக்கன் ‘யக்கன்’ என ஒலிக்கப்படும் வழக்காயிற்று. ‘தக்கன்’ எனும் பெயர் ‘தட்சன்’ என மருவியது போல் யக்கன் எனும் பெயர் ‘யட்சன்’ என மருவியது. இந்த யட்சன், பிரம்மயட்சன் எனும் பெயர்கள் சமணத்தை விழுங்கிய சைனத்தில் இன்றும் உண்டு. யட்சன் என்பதற்கு இணையான பெண்பால் பெயர் ‘யட்சினி’யாகத் தருவிக்கப் பட்டது.

இதல்லாமலும் சிற்சில விடங்களில் தாய்த் தெய்வ வழிபாடு மூதாள் வழிபாடு என்ற பெயரில் இன்று வரை தொடர்வதைப் பல ஊர்களில் நேரில் கண்டு வருகிறோம். மூதாள் என்ற சொல் தாய்த் தெய்வத்தின் அன்பினையும், முதன்மையினையும் பகரும் சொல்லாகும். இருளாயி, கருப்பாயி போன்ற தாய்த் தெய்வ வழிபாடும் எண்ணத் தக்கது. சாக்தம் என்ற சக்தி வழிபாடு செல்வாக்குப் பெற்றபின் பழைய தாய்த் தெய்வ வழிபாடு தனது முதன்மையினை யிழந்தது. இன்றும் கூடப் பல ஊர்களில் அம்மன் திருவிழாக்கள் முடிந்த மறுநாளில் ஒரு களிமண்ணாலானதோர் பெண் உருவச் சிலையினை வைத்துப் பலவாறாக ஏசியும் திட்டியும் கொண்டுபோய் நீரில் கரைத்தழிப்பர். இதனை ‘மாதங்கி ஏசுதல்’ என்றும் அந்தச் சிலைக்கு மாதங்கி என்றும் பெயர் சொல்கின்றனர். இந்த மாதங்கி என்ற சொல் ஆசீவக மெய்யியலில் சிறப்பு பெற்ற பெண் தெய்வத்தின் பெயராகும். திருநிலைகளிலும் கால்காசுகளிலும் இருக்கும் பெண் உருவமே இந்த மாதங்கியாகும்.

பழைய ஆசீவக வழிபாட்டு மரபு செல்வாக்கிழந்து சக்தி வழிபாடு செல்வாக்குப் பெற்றதனையே இந்நிகழ்வு காட்டுகிறது. இத்தகு வழிபாடுகள் பெரும்பாலும் இலக்கியங்களில் பதிக்கப் பெறாதவை.

அடுத்ததாக மெய்யியலின் வளர்ச்சிப் படிநிலையில் காணும் போது பழந்தமிழரின் மெய்யியலில் ஆசீவக மரபே பெரிதும் முதன்மை பெறுகிறது.
எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசு+ஈவு+அகம்
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு - தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம்.
ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர்.
ஆசீவகத் துறவிகளின் வாழிடங்கள் பெரும்பாலும் கற்குகைகளே. இந்தத் துறவிகளின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப் பட்டது.

துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச் சீருடையும் படிப்படியாக மெய்யியலில் முன்னேறும் போதெல்லாம் வேறு வேறு வண்ணச் சீருடைகளும் அணிவர். ஒரு ஆசீவக அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள துறவு மாணவர்களை அவர்தம் சீருடையின் வண்ணத்தைக் கொண்டே அவரது மெய்யியல் படிநிலையினை அறிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவதாக வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு வண்ணமாகும். இந்தக் கருப்பு வண்ண உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு நிலையில் உள்ளவராகக் கூறப் படுவர். இந்த நிலை மெய்யியலின் துவக்க நிலையாகும். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உணவுப் பழக்கங்களிலும், துறவறப் பயிற்சிகளிலும் பெரிய பட்டறிதல் இல்லை. ஏனெனில் இதுதான் துவக்க நிலை. கரும் பிறப்பு நிலையைக் கடந்த பின் அதாவது அடிப்படை ஒழுக்கங்களையும் துவக்க நிலைப் பயிற்சிகளையும் செம்மையாகக் கற்றபின் கருநீல வண்ண உடையால் அடையாளப் படுத்தப் படுவர். அதன் பின்னர் அடுத்த படிநிலைக்கு உயர்த்தப்பட்டு அதற்கேற்ற வண்ண உடையால் அவர் அடையாளப் படுத்தப் படுவார்.

இவ்வாறு ஆறு படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே இறுதி நிலையான நல்வெள்ளை நிலைக்கு அவர் சென்று வீடுபேறடைவார். இவ்வாறு அறுவகை நிலையிலும், ஒவ்வொரு வண்ணத்திலும் மூவகைப்பட்ட படிநிலைகள் அதாவது 6 x 3 மொத்தம் 18 படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே அவர் வீடடைய முடியும் என்பது வரைவு.

ஆசீவக மெய்யியலை அறிய முற்படு முன் ஒருசில:
1. ஏற்கெனவே ஆசீவகம் பற்றி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் ஆசீவக எதிர்ப்பணியினராலும் பின்னர் வந்த வைதீக நஞ்சினாலும் இழித்துக் கூறப்பட்டு அவரவர் நூல்களில் பதிவு செய்யப்பட்ட மாற்றார் கூற்றுக்களே என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2. ஆசீவகத்தின் தோற்றம், காலம் போன்றவற்றில் மயக்கம் ஏற்படக் காரணம் வார்த்தைப் புரட்டும், வரலாற்றுப் புரட்டுமே.

வார்த்தைப் புரட்டு

ஆசீவகத்தை அறிவு வழியிலும், அறிவியல் வழியிலும் நேர் கொள்ள இயலாத வைதீகச் சார்பு மற்றும் ஆசீவக எதிரணியினரால் ஆசீவக அடிப்படைக் கூறுகள் குறித்துத் தவறான பொருள் தரும்படிச் சொற்கள் திரிவாக்கம் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக ஊழ் என்பதற்கு ஆசீவகம் கூறும் பொருள் ‘இயற்கை நிகழ்வு’ என்பதே. அணுக்களின் புணர்வினாலும், பிரிவினாலும் (காலம், கருவி போன்றவற்றின் துணையினால்) ஏற்படும் இயற்கை மாற்றத்தையே இந்த ஊழ் எனும் சொல் குறிக்கும். (இவ்வூழ் பற்றிப் பின்னர்க் காணலாம்.)

ஆனால் எதிரணியினரோ ஆசீவகம் கூறும் ‘ஊழ்’ என்ற சொல்லுக்குப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வரும் பாவம், புண்ணியம் ஆகியவற்றின் தொகுப்பு எனத் திரித்துப் பொருள் கூறினர்.

இந்தப் பொருள் முரண்பாட்டால் ஆசீவகத்தின் ஊழ்க் கோட்பாட்டின் அடிப்படையே தகர்ந்து போகிறது.

அமணர் என்பது ஆசீவக மெய்யியலின் அடிப்படையில் அமைந்த தமிழ்ச் சொல்.
அமணர் = அம் + அணம் + அர்
அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.

அணம் - ஊழ்கியின் மேலண்ணம் (அண்ணம் - அணம் என நின்றது.)
அர் - பலர்பால் சிறப்பு விகுதி
அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கம் பயிலும் மேலண்ணத்தினை உடையவர் எனும் பொருள் கொண்ட இச்சொல், அம்மணம் எனும் ஆடையின்மைக் குறிக்கும் சொல்லின் திரிவாக அம்மணர் எனச் சுட்டப் பட்டதும் வழுவே.

(அழகிய சிறந்த அண்ணத்தில் ஊழ்கப் பயிற்சி உடையவர் எனும் பொருள்படும் அண்ணர் எனும் சொல்லும் இதன் அடிப்படையில் எழுந்ததே. ஈற்றுப் போலியாக அண்ணல் எனவும் மருவி இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை, அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை, அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன.)

அது போன்றே சூத்திரர் என்ற சொல்லும் தவறாகவே பொருள் சுட்டப் பட்டது. யாதெனில் எல்லாத் துறைகளிலும் எவ்வகைச் சிக்கல்களுக்கும் விடை காணும் நுட்பமான வழிமுறைகள் சூத்திரம் என வழங்கப்படும். இதன் அடிப்படையிலேயே இலக்கண நூற்பாக்களும் கணக்கியல் வழிமுறைகளும் சூத்திரம் என்ற சொல்லால் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. இந்த சூத்திர முறைகளை அறிந்தவர் எனும் பொருள் படும் சூத்திரர் என்ற சொல்லுக்கு இழிவானவர் என்ற பொருள் கற்பிக்கப் பட்டு தாழ்த்தப்பட்டனர். இந்த சூத்திரம் என்ற சொல் சூழ்ச்சி எனும் சொல்லின் வேரிலிருந்து சூழ் + திறம் > சூழ் + திரம் > சூழ்த்திரம் > சூத்திரம் என வருவிக்கப்பட்ட சொல்லாகும்.
சூழ் > விடையைச் சூழ்தல். பல்லாற்றானும் பட்டறிவாலும் தருக்க அறிவினாலும் விடையைச் சூழ்தல்.
திரம் > அவ்வாறு விடைகாணும் ஆற்றல். திறம் > திரம். மயங்கொலிப் பிழையால் வந்த மயக்கு வழூஉ.

அது போலவே, சமணம் வேறு; சைனம் வேறு. சமணம் ஆசீவக மரபில் கிளைத்தது. மூன்று நல்வெள்ளை நிலையினரால் நெறியாளப்பட்டது. அவர்களில் மூன்றாமவரான மற்கலியும், மகாவீரருமே ஒன்றாயிருந்தனர். அந்த நேரத்தில் மகாவீரருக்கும் மற்கலிக்குமிடையே ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் இருவரும் பிரிய நேர்ந்தது. தாய் மரபான ஆசீவகத்தில் உலகாய்தம், பொருளியல், மாந்த வாழ்வியல் போன்றவற்றிற்கான கருத்துகளுக்கு இடம் உண்டு. அதாவது குமுகத்தைப் புறக்கணித்துத் துறவி கூட வாழ இயலாது என்ற கருத்து ஆசீவகத்தினுடையது.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை
எனும் திருக்குறளும் இங்கு எண்ணத் தகும்.

மாறாக மகாவீரரோ துறவிக்கு உலகியல் பற்றிய சிந்தனை இருந்தால் துறவும் கை கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். துறவிகள் இல்லறத்தாருக்கு வழிகாட்டும் பொறுப்பாளர்களாக இருப்பதனை அவர் விரும்பவில்லை. துறவற ஒழுக்கக் கூறுகள் மட்டுமே தமக்குப் போதும் என்பது அவர் கருத்து. இக் கருத்து வேறுபாட்டால் ஆசீவக சமணத்தை விட்டு சைன சமயத்தை உருவாக்கினார்.

மூன்று ஐயனார்களைத் தவிர நல்வெள்ளை நிலையை அடைந்ததாக தமிழ் அறிவர்களால் யாரும் சுட்டப்படவில்லை. பின்னர் 23 திருத்தங்கரர் வரிசை கற்பிக்கப் பட்டதில் இன்றளவும் நமக்கு உடன்பாடில்லை. அது குறித்த ஆய்வுகள் தொடர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். சைனம் தனது மரபுக்கு வலிமை சேர்க்க ஆசீவக ஐயனார்களைச் சேர்த்துக் கொண்டதா என்பதே நம் ஐயம். ஒரு வேளை திருத்தங்கரர் மரபினை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், மகாவீரர் தனக்கெனத் தனிச் சமயத்தை உருவாக்கிய பின், அவருக்கு முன்பிருந்த திருத்தங்கரர்கள் 23 பேரும் சைனர்கள் என்று எப்படிக் கூற முடியும்? எள்ளுப் பேரனுக்குப் பிறந்த கொள்ளுப் பாட்டன் என்பது போலிருக்கிறதல்லவா இந்த வாதம்? சைனம் சமணத்திலிருந்து 23 திருதங்கரத் தலைமுறைகள் பிற்பட்டுத் தோன்றியது. எனவே இந்த 23 திருத்தங்கரர்களுக்கும் முரண்பட்ட சமயமே சைனம் என்பது தெளிவு. இந்த சைனம் பழைய கள்ளைத் திருடிப் புதிய மொந்தையில் வைத்த கதையாக சமணம் - சைனம் எனும் இரு சமயமும் ஒன்று என்பதான ஒரு மாயையை ஏற்படுத்தி, இன்று அந்தச் சமயத்தைப் பின்பற்றுவோர் கூடத் தாங்கள் சமணரா அன்றிச் சைனரா என்று கேட்டால் விழி பிதுங்கும் நிலையில் உள்ளனர்.

இந்த வார்த்தைப் புரட்டுகளுக்கும் மேலானதோர் வரலாற்றுப் புரட்டும் உண்டு. அதுதான் ஆசீவகத்தின் தோற்றக்காலம் பற்றிய கருத்து. 23 திருத்தங்கரர்களுக்கு அடுத்து வந்த மற்கலி மகாவீரரின் பிரிவுக்குப் பின் சமணத்தை ஆசீவகக் கருத்துகளின்று பிறழாமல் ஒரு சமய வரைவிற்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருக்கு முன்பே 23 திருத்தங்கரத் தலைமுற்களும், அதற்கும் முன்பே குமுக மரபு கொண்டதுமான ஆசீவகத்தை மற்கலிதான் உருவாக்கினார் என்பது தவறு என்று, சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். ஆசீவகத்தின் தோற்ற வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளி, அந்தப் பழைய வரலாற்றை மகாவீரரின் சைனத்திற்கு சேர்த்து விடும் வரலாற்றுப் பிழையே இது என்பது தெளிவு.

3. வைதீகம் வினைக்கோட்பாட்டையும், ஆசீவகம் வினைமறுப்புக் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கருத்தில் இன்றளவும் ஆசீவகம் நீர்த்துப் போகவில்லை. ஆனால் ஆசீவகர்கள் வினைக் கோட்பாட்டின் உடன்பாட்டாளர்கள் என்பதான வீண் புரளியும் உண்டு.
ஆசீவகத்தின் நிறக்கோட்பாட்டை மக்கள் தவறுதலாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வைதீகம் வருணக் கோட்பாட்டைக் கொண்டு வந்தது. நிறம் என்பது வர்ணம் (வண்ணம்). எனவே வர்ணக் கோட்பாடு ஆசீவகத்தில் உண்டு என்று பேசியது. உண்மையில் ஆசீவகத்தில் பள்ளியில் சேர்க்கப்பட்ட பயிற்சியாளர் மேல்நிலை யடையும் வரை அறுவகை நிறத்தால் குறிக்கப்பட்டனர். அது அவர்களின் படிநிலை வளர்ச்சியைக் குறிப்பதே ஒழிய வேறில்லை. இன்றைய பள்ளிக் கூடங்களில் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்க்கு ஒரு வண்ண உடையும் பதினோராம் வகுப்பு மாணவர்க்கு ஒரு வண்ண உடையும் விதிக்கப் படுவது போல ஒரு ஆசீவகப் பள்ளியில் உறையும் புதியவர், இயல் மாந்தர் போன்றோர் அங்குள்ளோரை வகைப் படுத்தி அடையாளங் காணவே இந்த நிறக் கோட்பாடு. மேலும் அவரவர் தகுதி நிலையினை அறியவும் இந்த நிறக் கோட்பாடு பயன்பட்டது. (இந்த அறிவர் மரபினால் உலகுக்கு அளிக்கப்பட்ட தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சியில் கச்சை அளிப்பதில் இன்னமும் இந்த நிறக் கோட்பாடு பின்பற்றப் படுவது கண்கூடு. ஆனால் நிறங்கள் மட்டும் திரிவாக்கம் பெற்றுள்ளன.) ஆனால் வைதீகமோ ஆடையின் சிறப்பு தெரியாதவர்களால் உருவாக்கப் பட்டதாகையால் மக்களின் தோலின் நிறத்தையே வகைப்படுத்திப் பிறக்கும் போதே பாகுபாடு செய்தனர்.

மேற்கூறிய குழப்பங்களைத் தள்ளி வைத்து விட்டு ஆசீவகத்தைப் பார்த்தால் மட்டுமே அது யானையாகத் தெரியும். இன்றேல் அது வெறுங் கல்லாகவே தெரியும்.

ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல். வைதீகமோ பக்தன் ஆழ்வார், ஆச்சாரியர்களுக்குப் பணிவிடை செய்து படையலும் போட்டுக் கைகட்டி நிற்க வேண்டும் என்கிறது. நெய்யும், பருப்புமாகச் சாப்பிட்டு விட்டு உழைக்காமல் உட்கார்ந்திருந்தால் அவனது சிந்தனை மெய்யியலை நோக்கியா போகும்? மெய்யுடல் சார்ந்தல்லவா போகும்.

ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு அவரவர்தம் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி, மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு நிறங்களாவன:

1. கருமை & சாம்பல் - துவக்க நிலை
2. நீலம் - இரண்டாம் நிலை
3. பசுமை - மூன்றாம் நிலை
4. செம்மை - நான்காம் நிலை
5. மஞ்சள் - ஐந்தாம் நிலை
6. வெள்ளை - இறுதி நிலை
இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை:

1. துவக்க நிலை - இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல் படிநிலையிலிருப்பவர்.

2. இடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள்.

3. கடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற உணர்ந்தவர்.

ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்.

1. கரும்பிறப்பில் 1. கருமை முதல் படி
2. கருமை இரண்டாம் படி
3. சாம்பல் மூன்றாம் படி
2. நீலப் பிறப்பில் 1. கருநீலம் முதல் படி
2. நீலம் இரண்டாம் படி
3. வான்நிறம் மூன்றாம் படி
3. பசும் பிறப்பில் 1. அடர்பச்சை முதல் படி
2. பச்சை இரண்டாம் படி
3. வெளிர்பச்சை மூன்றாம் படி
4. செம்பிறப்பில் 1. செம்மை முதல் படி
2. இளம்சிவப்பு இரண்டாம் படி
3. காவி மூன்றாம் படி
5. மஞ்சள் பிறப்பில் 1. அடர் மஞ்சள் முதல் படி
2. இளமஞ்சள் இரண்டாம் படி
3. பொன்மை மூன்றாம் படி
6. வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்.
இவற்றைக் கடந்த பிறகே (மேலே கூறப்பட்ட 18 படிகளையும்) நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம். அதாவது பயிற்சியாளரின் குறைகளும் குறையும். அவரது அறிவைச் சூழ்ந்துள்ள மாசு குறைவதனையே (அறியாமை இருள் நீங்குவதனை) இந்த நிற வேறுபாடு குறிக்கும்.
படிநிலை உயர உயர நிறம் குறையும். இதுவே ஊழ்கப் பயிற்சியிலும் 18 படிநிலைகளைக் கடந்த ஐயனாரை அடைவது எனும் கோட்பாடு. சேர நாட்டு ஐயனாரே தற்போது ஐயப்ப வழிபாட்டால் தொழப்படுகிறார். ஐயப்பன் பெயரால் செய்யும் ஐயனார் வழிபாட்டில் தற்போது சரியான குருமார்களின் வழிகாட்டல் இன்மையால், பிறழ நடத்தும் குளறுபடிகள் ஏராளம்.

இந்த வழிபாடு செய்ய மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர். இதில் முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் நீல உடையினையும், அடுத்த மூன்றாண்டில் பச்சை உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் சிவப்பு உடையினையும் அதற்கடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சள் உடையினையும் இறுதி மூன்றாண்டில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து நோன்பிருப்பர். 18ஆம் ஆண்டிறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். இது ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு வழிபாடேயாகும். இதில் இறுதியில் கூறப்படும் தென்னை வைத்தல் எனும் நிகழ்வு தேங்காயின் உட்பருப்பு நல்வெள்ளை எனும் கருத்துப் படவே கையாளப் படுகிறது.
நல்வெள்ளை எனும் இறுதி நிலை நிறமிலி எனும் நிலையினைக் குறிக்கும்.

கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம். இந்த அறிவு மரபில் வந்த அறிவர்களுள் ஒருவரான வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே. இந்த நிலையினை வீடடைதல் என்று சொன்னால், வைதீகம் கூறும் சொர்க்கம், நரகம் போன்றே ஆசீவகமும் கூறுகிறதோ எனும் ஐயம் எழக்கூடும். இந்த வீடடைதல் என்பது வைதீகர்களின் சொர்க்கப் புரட்டிலிருந்து எவ்வாறு வேறுபட்டு உயர்ந்து நிற்கிறது என்பதனை விளக்க ஊழ்கத்தை விளக்குவோம். ஊழ்கம் (யோகம்) எனும் சொல் ‘ஊழ்’ எனும் சொல்லினைக் கொண்டு கிளர்த்தலால் ஆசீவகம் கூறும் ஊழினை முதற்கண் விளக்குவாம்.

உழு எனும் சொல்லினடியாக ஊழ் எனும் சொல் கிளைத்தது. ‘விழு’ என்பது ‘வீழ்’ என வந்தது காண்க. ‘உழு’ என்ற சொல் உழுதல் (நிலத்தை) எனும் செயலைக் குறிக்கும்.

நிலத்தை உழுகின்ற போது ‘மண்’ எனும் பூதம் ‘நீர்’ எனும் பூதத்துடன் சேர்க்கப்பட்டு கதிரவன் ஒளிவெப்பம் எனும் ‘தீ’ பூதத்தின் முன்னிலையில் ‘வளி’ எனும் பூதம் மண்ணின் கண்ணறைகளில் சேமிக்கப்படுவதைக் குறிக்கும். இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்பட்டே பயிர்களுக்கு அளிக்கப்படுகிறது. உயிர்வளி சேமிக்கப்படும் போது மண் கண்ணறைகளில் உள்ள நீர் எனும் பூதம் தீ எனும் (கதிரவன் ஒளி) பூதத்தால் ஆவியாக்கப்பட்டு, அந்த வெற்றிடத்தில் வளி சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்படுதல் உழு எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த உழு, ஊழ் எனும் சொல்லின் அடிப்படையில் அமைந்த ஊழ்கம் எனும் பயிற்சி மாந்த உடலின் (நுண்ணிய) கண்ணறைகள் தோறும் உயிர்வளி சேமிக்கப் பயன்படுகிறது. இந்த உயிர்வளியினை அதிகம் பெறும் இயற்கைச் சூழல் அமைந்த சோலைகளிலும், மலைக் குகைகளிலுமே பெரும்பாலும் ஆசீவகப் பள்ளிகள் அமைந்திருந்தன.

இந்த ‘ஊழ்’ எனும் சொல்லிற்கு இயற்கையில் நிகழும் அணுவியல் மாற்றத் தொடர் நிகழ்வு என்பதே ஆசீவக விளக்கமாகும். இயற்கை நிகழ்வுகளின் ஒழுங்கமைவு என்பது விதிப்படியே நிகழும் ஆதலால் அணுவியம் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பூதங்களில் ‘வெளி’ என்பது இடத்திணையாதலால் இது ஆசீவகக் கோட்பாடுகளில் தெரிநிலை பூதமாகக் கருதப் படவில்லை. (நிலம், நீர் வளி ஆகியவற்றுக்கு காட்சி அளவையும் நிறை அளவையும் உண்டு. தீக்கு காட்சி அளவை மட்டும் உண்டு. வெளிக்கு காட்சி அளவையும் நிறை அளவையும் இல்லை. எனவே இது தெரிநிலை பூதமாகக் கருதப்படவில்லை. ஆனால் மண், நீர், தீ, வளி ஆகியவை தெரிநிலை பூதமாகக் கருதப்படுகின்றன. இவற்றை ஆசீவகம் பின்வருமாறு வரிசைப் படுத்துகிறது.

1. மூலஅணு
2. விளைவணு

மூல அணு என்பது வளியணுவாம். இவ்வளியணுக்கள் வெவ்வேறு விழுக்காடுகளில் தமக்குள் புணர்ந்து நிலவணுவையும் நீரணுவையும் விளைவிக்க வல்லன. எனவே வளியணு மூலவணுவாகக் கருதப் படுகிறது. நீரணுக்களையும், நிலவணுக்களையும் வளியணுக்களாலப் பகுக்க இயலும். ஆனால் வளியணுக்களைப் பகுக்க இயலாது. இவ்வளியணுவே ஏனைய பூதங்களுக்கு அடிப்படை அலகாய் அமைதலின் இது ‘இயக்கணு’ எனவும் வழங்கப்படும். ஆசீவக அணுவியம் மூலவணுவை அழிக்க முடியாது என்கிறது.

விளைவணு

நீரணுவும், நிலவணுவும் வளியணுக்களின் வெவ்வேறு விழுக்காட்டுச் சேர்க்கையினால் விளைவன. எனவே இவை ‘இயங்கணு’ எனவும் மூல அணுவால் விளைவிக்கப் படுதலின் ‘விளைவணு’ எனவும் வழங்கப்படும்.
நீரணு, நிலவணு, வளியணு ஆகியவை அவ்வப் பூதங்களுக்கு அடிப்படை அலகாம். ஆனால் ‘தீ’ என்கின்ற பூதமோ அணுவிலாப் பூதம் என்று வழங்கப்படும். ‘தீ’ என்பது மூல அணுக்களிலிருந்து விளைவணுவை உருவாக்கவும், மீண்டும் விளைவணுவிலிருந்து மூல அணுவைப் பகுக்கவும் பயன்படும் ஆற்றலேயன்றி அதற்கு அடிப்படை அணுக்கள் கிடையாது. ஆனால் ஏனைய மூன்று பூதங்களிலும் உள்ளுறைந்து நிற்றலால் ‘தீ’ உள்ளுறைப் பூதம் என வழங்கப் பெறும். அணுவிய நிகழ்வுகள் (புணர்தலும் பிரிதலும்) வெப்பத்தின் முன்னலையில் மட்டுமே நிகழும். வெப்பமின்றி அணுவிய நிகழ்வுகள் நடப்பதில்லை. இரு அணுக்கள் புணர்தல் நிகழும் போதுள்ள வெப்ப ஈர்ப்பு அந்த அணுக்கள் பகுக்கப் படும் போது வெளிப்படும். அவ்வாறே இரு அணுக்கள் புணரும் போது வெப்பம் வெளிப்பட்டால் அவை பகுபடும் போது அதே அளவு வெப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்.

வெப்பம் ஏற்றுக் கொள்ளுதலும், உமிழப்படுவதுமாகிய வெப்ப விளைவு, நிகழ்வுகளின் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கும். பிற நேரங்களில் வெப்பம் இயல் நிலை அளவிலேயே இருக்கும். ஏனைய மூன்றணுக்களுக்கும் (நில, நீர், வளி) பரும அளவு உண்டு. தீ எனும் பூதம் இம்மூன்றிலும் உள்ளுறைவதால் தனி அணுவோ பரும அளவோ கிடையாது. இது ஒரு ஆற்றல் வெளிப்பாடே. ஆனால் பூதங்களில் இத்தீயாற்றலும் ஒன்றாகவே கொள்ளப்படும். மூல அணுவான வளியணுவுடன் ‘தீ’ சேர்ந்தே ஏனைய அணுக்களை விளைவிக்கும். ‘தீ’ பூதம் ‘அணுவிலி பூதம்’ எனவும் வழங்கப்படும்.

நிலவணு படுசீரும் (அ) வீழ்சீரும்
நீரணு பாய்சீரும்
வளியணு கிடைச்சீரும்
தீயாற்றல் மேற்சீரும் கொண்டவை.
சீர்களின் தன்மைக்கேற்ப இயக்கம் நிகழும்.

ஒரு பொருளில் எந்தப் பூதத்தின் கூறு அதிகமாக உள்ளதோ அந்த பூதத்தின் சீரிலேயே இயக்கம் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட பூதியம் குறிப்பிடத் தக்க அளவில் இருப்பின் அவற்றின் தொகுபயனுக்கேற்ப சீர் விளைவும் இயக்கமுமிருக்கும்.

பால் தன்மைக்கேற்பப் பொருட்களின் வடிவமையும். களிமண், சேறு, பானை, ஓடு போன்றவை ஒரே பொருளின் பல்வேறு பால் தன்மையால் வந்த புற வேற்றுமை வடிவங்களே.

பொருட்களின் அணுவியல் செயல்பாடுகள் ஊழ் எனவும், இது நிகழத் தற்செயல் கூறுபாடுகள் முதன்மைக் காரணிகள் எனவும், இந்நிகழ்வு இவ்வாறுதான் நிகழ முடியும் என்பதே நியதி என்றும், இதில் பாவம், புண்ணியம் மற்றும் இவற்றுக்குக் காரணம் என்று எதனையும் கற்பித்து மயங்காதிருத்தலே வினைமறுப்பு எனவும், மாற்றம் என்பது ஒன்றே மாறாதது எனவும், பொருளியல் சார்ந்த உழைப்பில் யாருக்கும் தனிப்பட்ட விலக்குமில்லை எனவும் ஆசீவகம் வலியுறுத்தும்.

இத்தகு ஆசீவகம் ஏன் வீடுபேற்றை வலியுறுத்தியது? அப்படியானால் வீடடையாதவர்களின் நிலை பற்றி ஆசீவகம் என்ன நிலைப்பாடு கொள்கிறது? வீடு பேறடையாதவர்கள் மறு பிறவிக்குள்ளாவார்கள் என்று ஆசீவகம் நம்புகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாவது யாதெனில் மாந்த உடலின் பிணி, மூப்பு, சாக்காடு எனும் இழவூழ்களை வெல்லவும் உடலின் பயனாய ஊழ்கத்தின் உயர் நிலையினை அடையவுமே அவ்வாறு நல்வெள்ளை நிலையினை அடைவது சிறப்பு. அடையாவிடினும் அந்நிலை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்போமென்றோ அதனால் பெருங்கேடு விளையுமென்றோ ஆசீவகம் கூறவில்லை.

ஊழ்கமும் மெய்யியலும்

ஊழ்கம் செய்வதற்கு ஆசீவகத் துறவிகள் தனிப்பள்ளிகள், நிலாப்பாறை, வானியல் ஆய்வுப் பாறைகள் எனப் பல்வேறிடங்களைத் தம் பள்ளி வளாகங்களில் கொண்டிருந்தனர். இவை யாவும் உயிர்வளி மிக்க செறிவுடன் விளங்கும் இடங்களே. ஊழ்கத்தின் மூலம் உயிர்வளியினைத் தங்கள் உடலிற்றேக்கி வைத்து தனது உடலணுக்களைச் செம்மைப் படுத்தி விழுமிய ஆற்றல் நிலைகளை ஏற்படுத்தினர். இதன் மூலம் உடலணுக்களில் வளிநிலை மூல அணுக்களின் தேக்கத்தினைக் கூட்டிப் பிறவணுக்களின் இயக்கங்களையும் நிகழ்வுகளையும் சுருக்கி இறுதியில் ஒளியுடல் பெறுவதே (நல்வெள்ளை) ஊழ்கத்தின் நோக்கமாகும். இவ்வாறு ஒளியடைந்தவர்களுக்கு உலகியலில் ஏற்படும் புறத் தொல்லைகள் இருக்காது. மேலும் வாழ்வியல் மெய்ப்பாட்டின் இறுதி நிலையாகவும் இருக்கும். ஆசீவகம் கோரும் நிலைப்பாடும் அதுவே யாகும். மறுபிறவியை ஆசீவகம் பேசவில்லை.

ஊழ்கமும் உடலும்

உடலின் அணுக்களிடையே உயிர்வளியினைத் தேக்கி வைத்து ஒளியுடல் பெறும் நுட்பத்தினைப் பின்வருமாறு அறிவர்கள் பயிற்சியின் வாயிலாகப் பெறுவர். வளியோட்டத்தினை உடலுக்குட் செலுத்த இரண்டு நாசிப் புழைகளுள்ளன. இவற்றின் வழியாகக் காற்றினை நாம் உள்வாங்கி வெளியிடுகிறோம் என்பது யாவருமறிந்ததே. ஆனால் உட்செல்லும் காற்றும், வெளியேறும் காற்றும் எந்தப் புழை வழியாகச் சென்று எந்தப் புழை வழியாக வெளியேறுகிறது என்பதனை உற்று நோக்க வேண்டும்.

வலப்புழையில் காற்று கூடுதலாகவும், இடப்புழையில் குறைவாகவும் இயக்கம் நிகழுமாயின் இது வலநாடியாகப் பிங்கலை நாடி என்றும், ஆண்நாடி என்றும், சூரிய கலை என்றும் சொல்லப்படும். இடப்புழையில் இயக்கம் அதிகமிருப்பின் இடகலை என்றும், பெண்நாடி என்றும், சந்திர கலை என்றும் வழங்கப்படும். இரு புழைகளிலும் சம இயக்கம் நிகழின் இதனைச் சூழுமுனை என்றும் அலிநாடி என்றும் அக்கினி நாடி என்றும் சொல்லப்படும். இவை முறையே கதிர், மதி, சுடர் என வழங்கப்படும்.

இடகலை நாடி வாதமென்றும்
பிங்கலை நாடி பித்தமென்றும்
சூழுமுனை நாடி ஐயமென்றும் சொல்லப்படும்.

வாதநாடி பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும்
பித்தநாடி போட்டிக்கும் வெல்வதற்கும்
ஐயநாடி உலகியனீங்கிய ஊழ்க மெய்யியலுக்கும்
சிறப்பானவை. வாதத்திலும் பித்தத்திலும் சிதறியோடும் மூச்சினை ஐயத்தில் நிற்க வைத்து உடலின் மாசுக்களை நீக்கி ஐயத்தில் நிறுத்தி மெய்யூழ்கம் பெறும் பயிற்சியே ஊழ்கப் பயிற்சியாகும். இந்த மூச்சோட்டத்தினை முறைப்படுத்த ஆசீவகர்களின் கற்படுக்கைகள் பல்வேறு சாய்வுகளில் அமைக்கப்பட்டிருப்பது நல்ல ஏந்தாகும். எந்தப்புறம் உடல் எடையினால் அழுத்தப்படுகிறதோ அதன் எதிர்ப்புறத்திலுள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். நாளடைவில் ஐய நாடியில் நின்று ஊழ்கப் பயிற்சி கைவரப் பெற்றவர் பல்வேறு ஆற்றல்கள் கைவரப் பெறுவர். மெய்யியல் படிநிலை வளர்ச்சியும் கூடும். அவ்வாறு ஐயநிலை கைவரப் பெற்றவர்களே ஐயன் என்றும், ஆர் என்னும் சிறப்பு விகுதி சேர்த்து ஐயனார் என்றும் வழங்கப் பெறுவர்.

இயல்பாகவே மாந்த உடலில் எந்தக் கால் மடக்கப்பட்டு அழுத்தப் பெறுகிறதோ அதற்கு எதிர்ப்புறம் உள்ள புழையில் மூச்சோட்டம் நிகழும். காலுடன் உள்ள தொடர்பாலேயே மூச்சோட்டம் கால் ஓட்டம் என்றும், மூச்சினைக் கால் என்று சிறப்பு இடுகுறியாகவும் வழங்கப்படுகிறது. இதனைக் குறிக்கவே ஐயனார் (ஐயப்பன்) உருவச் சிலைகளில் இருகாலையும் சமப்படுத்தி ஒரு கட்டுப் போடப்பட்டிருக்கும். இது இரு மூச்சும் சமமான ஐய நிலை என்று குறிப்பால் உணர்த்தவே. அன்றி இடக்காலையோ வலக்காலையோ தனியாகக் கட்டுப் போட்டுக் கட்டினால் எதிர்ப்புழையில் மூச்சோட்டம் செல்லும் நிலை என்றறிய வேண்டும்.

சிலர் ‘என்னைக் காலைக் கட்டும் வரை நான் இதற்கு உடன் படேன் என்று சொல்வர்’. அப்படியாயின் தனது மூச்சு நிற்கும் வரை அல்லது மரணம் நேரும் வரை உடன் படேன் என்பதாகும். மயங்கினாரினின்று இறந்தாரைப் பிரித்தறிய இறந்தாரின் இருகாலையும் சேர்த்துக் கட்டியிருக்கும். இதற்கு நாடிக் கட்டு என ஆசீவகம் குறிக்கும். அவனது நாடி அதாவது மூச்சு நிறுத்திக் கட்டப்பட்டு விட்டது என்பதே அதன் பொருள். அதன் பிறகே இறந்தாருக்கான ஒன்பது கடன்கள் செய்யப்படும். அவ்வாறு உயிர் பிரிந்த உடலுக்கும் ஊழ்கத்திலுள்ள உடலுக்கும் உள்ள வேறுபாடுகள் எளிய மாந்தர்க்குத் தெரியாது. உயிரடக்கம் என்பது வேறு; மரணம் என்பது வேறு. இதனைப் பிரித்தறியச் சில நுட்பமான வழிமுறைகள் உண்டு. ஆனால் இயல் மாந்தர்க்கு இது கடினம். இழவூழ் குறைந்து ஆகூழ் மிஞ்சினால் உயிர்ப்பு அடங்கிய உடலில் மீண்டும் இயக்கம் ஏற்பட வழியுண்டு. ஒருவேளை அவ்வாறு இயக்கம் ஏற்படுமானால் அந்த உடல் சிதையாமல் காப்பாற்றப்பட்டு வந்தால்தான் மீண்டும் உயிருடன் எழ முடியும். மேலும் ஆகூழ் கூடுவதற்காக அந்த உடல் சில வகைகளில் பாதுகாக்கப்படும். (ஆசீவக மரபின் ஆசு மருத்துவத்தில் உயிர் அடக்கமும், உயிர் மரணமும் பற்றிப் பல்வேறு விந்தையான உண்மைகள் கூறப்பட்டுள்ளன.)

உடல் அழுகாமல் ஆகூழ் கூடுவதற்காகப் பின்வரும் வகையான கடன்கள் செய்யப் படுகின்றன. இறந்தவரின் உடலின் இரு பாதியும் (வலம், இடம்) ஒன்றை யொத்ததாகவே மறுபாதியும் கிடத்தப்படும்.

1. வாயில் பாலூற்றுதல்.
2. அழுக்கு நீங்க நீரால் கழுவுதல்.
3. உள்ளங்காலுக்கு அருகில் (வெம்மையைக் கூட்ட) தீச்சட்டி வைத்தல்
4. நெய்த்திரிகளை எரியூட்டி சூழ நின்று பிடித்தலால் புறவெப்பத்தினைச் சீர்செய்தல். (கரிவளி உமிழாதிருக்கவே நெய்த்திரி)
5. நல்லெண்ணையினைத் தாழியில் ஊற்றி அதற்குள் உடலை வைத்து வெப்பச் சம நிலையினைப் பாதுகாத்தல் (நல்லெண்ணெயின் தன் வெப்பம் மாந்த உடலுக்கு ஆகூழ் தரும் என்பதாலேயே வாரம் ஒரு முறை நல்லெண்ணெய்க் குளியல் நடைமுறைப் படுத்தப் பட்டது.)
6. தலையில் மருந்து எண்ணெயினைத் தேய்த்தல். இதில் ஒவ்வொரு மரபிலும் அதே மரபைச் சேர்ந்தவர்கள் கமுக்கமான தனித்தனி மருத்துவ முறைகள் வைத்திருந்ததனால் அம் மரபைச் சார்ந்தவர்கள் மட்டுமே இதனைச் செய்ய அனுமதிக்கப் பட்டனர். (இன்றும் கூட உயிர் நீத்தாரின் மகன்கள் மட்டுமே இதனைச் செய்ய உரிமை உள்ளவர்களாகக் கருதப் படுகின்றனர்.)
7. தீச்சட்டியில் பசுவின் வரட்டியினை எரித்து மூச்சுக் காற்றில் நெடி சேர்த்தல்.
8. உடல் வீங்கி அழுகாதிருக்க புதுத்துணியினால் சுற்றி வைத்தல்.
9. நீர்க்குடத்தினை சிறு துளையிட்டு உடலினைச் சுற்றி நீர்த்துளிகள் சிதறும்படி செய்தல்.

இன்னவற்றுடன் நுண்ணுயிர்ச் சிதைவினைத் தவிர்க்கும் பொருட்டுத் துளசி முதலிய மூலிகைகளும், கருப்பு வெற்றிலையும் வாயில் வைத்துப் பொதிதல். இவ்வாறு உடலைப் பாதுகாத்தல் பாடம் செய்தல் எனப்படும். ஓலைச்சுவடி போன்றவை சிதைந்து அழியாமல் இருக்கக் கரிசாலை, மஞ்சள் முதலியன கொண்டு பூச்சு செய்வதற்குப் பாடம் செய்தல் அல்லது பாடம் போடுதல் என்று பெயர். ஒரு ஆசீவக ஊழ்கியின் உடலுக்கு அவர் சார்ந்த ஆசீவகப் பள்ளியினரால் மட்டுமே இக்கடமைகள் செய்யப்பட வேண்டும். அப்பள்ளியின் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பாடம் இடும் நிகழ்ச்சியை ஒரு பாடத்திருவிழாவாகவே கொண்டாடுவர்.

ஊழ்கம் செய்யும் போது துவக்கத்திலேயே ஐய நாடி கைவரப் பெறாதாகையால் சூரிய, சந்திர நாடிகளை (கதிர், மதி) சமமாக ஓட்ட வேண்டும். ஐந்து நாழிகைக்கு ஒரு முறை கதிரும், மதியும் மாறி நடக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளில் ஆறு முறை பெண் நாடியும், ஆறுமுறை ஆண் நாடியும் ஆகப் பன்னிரு முறை மாறி நிகழும். இதனையே ஒரு நாளில் இலக்கினம் ஆறு ஆண் இராசி மண்டலத்தையும், ஆறு பெண் இராசி மண்டலத்தையும் மாறிக் கடந்து பன்னிரு இராசிகளைக் கடந்து வருவதாக ஆசீவக அறிவியலான கோளியல் கணியம் சுட்டிக் காட்டும். இந்த ஐந்து நாழிகைப் போதில் ஒவ்வொரு இராசியிலும் நிகழும் மூச்சோட்டம்,
நிலப்பூதியத்தில் 11/2 
நீர்ப்பூதியத்தில் 11/4
நெருப்புப்பூதியத்தில் 1
வளி பூதியத்தில் 3/4
வெளிபூதியத்தில் 1/2
ஆக மொத்தம் 5 நாழிகைப் பொழுது செல்ல வேண்டும். இதனைப் பயிற்சியால் அறியலாம்.

இந்த ஒழுங்குக்கு உட்பட்டுச் செய்யப்படும் ஊழ்கம் ஆகூழ் எனப்படும். அதாவது உடலியலில் நன்மை தரத்தக்க வளர்ச்சி நிலைகளைக் காட்டும். இன்றேல் ஒழுங்கு தப்பின் அது உடலணுக்களுக்குக் கேடாய் முடிந்து அணுக்களின் அழிவுக்குக் காரணமாகும். இந்தக் கேடு தரும் ஊழ் போகூழ் எனப்படும். இதனை இழவூழ் என்றும் கூறுவர். இழவூழ் தொடர்ந்து நடக்கின் உடலழிந்து மரணம் நேரும். எனவேதான் மரணம் நடந்த இடத்திற்குச் செல்வோர் தாம் இழவூழுக்குப் போவதாகக் கூறுவர். தற்போதைய வழக்கில் இழவுக்குப் போகிறேன் (இழவூழ் > இழவு) என்கின்றனர்.

ஆகூழும் போகூழும் சமமாயிருக்கும் நிலைக்கு அறிவூழ் என்று பெயர். ஆசீவகக் கணிய அறிவியல்,
ஆகூழை > அமிழ்த ஊழ்கம் என்றும் (அமிர்தயோகம்)
போகூழை > மரண ஊழ்கம் என்றும் (மரணயோகம்)
சம ஊழை > அறிவூழ்கம் என்றும் (சித்தயோகம்)
கூறுகின்றது.

இவை யாவும் ஆசீவக மரபின் ஆசு கணியர்கள் பின்பற்றும் நுட்பமென்றறிக. ஐங்கூறில் கிழமை, உடு, உவா, ஊழ்கம், கருவி செயல் வகை என்ற ஐந்தும் இடம் பெறும்.

இவ்வாறு ஊழ்க நிலையில் உயர் நிலையினை அதாவது ஆறு வண்ணங்களின் 18 படிநிலைகளையும் கடந்து ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல் செறிவுற்று ஆகூழ் மிஞ்சி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி யிணைந்து உடலழியா நிலையும், ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக இறுதி இலக்காகக் கருதப் படுகின்றது. அவ்வாறு இறுதி நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை உறுதிப் பொருள்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது.
அவையாவன:

1. கடைமிடறு

இறுதி நிலையிலுள்ளவர்கள் நாவரட்சியினை நீக்கும் பொருட்டும் ஊழ்கம் வெற்றி பெறவும் வேண்டி அவருடனிருப்போரால் அளிக்கப் பெறும் இந்த இறுதி நீர்மமே ‘இறுதிப் பானம்’ என்று சொல்லப்படும் இந்தக் கடை மிடறு. இந்த ஆசீவக அறிவு மரபினை உள்வாங்கித் தோன்றிய மாலியத்தில் கூட இறுதி நிலையிலுள்ளவர்களுக்குத் துளசி கலந்த நீர் வாயில் ஊற்றப்படுகிறது. சிவனியர் வில்வ இலையினைத் தண்ணீரில் போட்டு இறுதி நிலையாளரின் வாயில் ஊற்றுவதும் இதன் தழுவலே. ஆசீவகத் துறவியர் தம் குகைகளைச் சுற்றிலும் நத்தைச்சூரி, அருகுபத மூலி ஆகிய செடிகளை வைத்திருப்பதும் இந்தத் தேவை கருதித்தான்.

2. இறுதிப் பாடல்

இறுதி நிலையாளரைச் சுற்றி யமர்ந்து ஆசீவகர்கள் தம் குரு மரபினை வாழ்த்தியும் ஊழ்கம் நல்லபடியாகப் படி கடக்க வேண்டு மென்றும் வாழ்த்திப் பாடுவது. தற்போது கூட உயிர் துடிப்பவர்கருகிருந்து மாலியர் திவ்வியப் பிரபந்தம் பாடுவதும், சிவனியர் தேவாரம், சிவபுராணம் பாடுவதும் கண்கூடு. இது இறுதி நிலையாளருக்குப் புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டும் என்பது கருத்து.

3. இறுதி ஆடல்

கடைப்படி கடக்க வேண்டி ‘நிருத்தம்’ எனக் குறிக்கும் வகையினை ஒத்த ‘சூரிய நாடி’ ஓடச் செய்யும் ஓர் நடனம். இது உடலில் வெம்மையைக் கூட்டி ஊழ்கியின் நாடிச் சவ்வினை இளக்கி அச்சவ்வினைக் கிழித்து உயிர்வளி மேலேறப் பயன்படும்.

4. இறுதி வரவேற்பு

ஊழ்கியின் உறுதியையும், பயிற்சி வளமையையும் கண்டு, ஊழ்கியால் மதிக்கப் படும் அவரது குரு மரபினர் (ஏற்கெனவே ஒளியுடல் பெற்றவர்கள்) இவ்வூழ்கியை எதிர் கொண்டு வரவேற்பர் என்ற நம்பிக்கை. இன்றைய மெய்யியலார் மலர்ப் பல்லக்கில் தேவர்கள் எதிர் கொண்டு அழைத்துச் செல்வர் என்று கூறுவதும் இந்த நம்பிக்கையின் தழுவலே.

5. காரிருள்

இறுதி நிலையினை அடையுமுன் (தமர் திறக்கு முன்) உயிர் வளியின் அழுத்தம் கூடக் கூட ஏற்படும் ஒரு அழுத்த நிலையினால் கடும் காரிருளும் மேகமும் சூழ்ந்தது போல் தோன்றுமாம். அப்போது உறுதியாக ஊழ்கத்தினைத் தொடர வேண்டும். இதுவே மிகவும் கடுமையான நிலை என ஊழ்க மெய்யியல் வரைவு செய்கின்றது.

6. நிறையாவழிகையமிழ்தூற்று

உயிர்வளி மேலழுத்தலால் அண்ணம் என்று சொல்லப்படும் உள்நாவிற்குப் பின்புறம் ஒரு சிறு புழை யானையின் தும்பிக்கை போன்ற சிறு சவ்வின் முனையில் தோன்றி ஐய நீரைச் சுரக்கும். இதுவே ஊழ்கிகள் அமிழ்தம் என்று சொல்வதாகும். இந்த அமிழ்தம் இனிப்புச் சுவை உடையதென்றும் இதனை யுண்டால் உடல் எளிதில் அழியாதென்றும் உணவோ, நீரோ அவர்களுக்குத் தேவைப் படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அமிழ்தம் ஊறிக் கொண்டிருக்குமே ஒழிய எதிலும் வழித்து நிரப்ப இயலாது. அவ்வளவு நுண்புழையில் மிகச் சிறிய ஊறலாக அமையும் இந்த நிலையடைந்த பின் கவலைகளும் துன்பங்களும் இல்லை என்பர்.

7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர் திறப்பு

ஊழ்கம் முற்றுப் பெறும் நிலை இது. மேலெழுப்பப்பட்ட உயிர்வளி அமிழ்த ஊற்றைக் கடந்தபின் ஒரு சிறு தமர் திறக்கும். இது கண்ணின் பின்புறம் உள்ளதாகக் கூறுவர். அந்தத் தமர் உடைந்தபின் உயிர்வளியும் உயிர்ப்பும் தாமரை மலர் போன்ற இதழினையுடைய உயிர்ப்பெரு வெளியில் சென்றடையும் என்றும் இதனால் ஒளியுடல் கிட்டும் என்றும் இதுவே வீடுபேறு எனவும் கூறப்படும். இந்தத் தாமரை மலரில் 1008 இதழ்கள் உள்ளதாக ஊழ்க மெய்யியல் கூறுகிறது.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


8. ஐயன் நிலை அடைதல்

இந்த நல்வெள்ளை நிலையினை அடைந்தவர் ஐயனாராகக் கருதப்படுவார் என்பது ஆசீவக மெய்யியல் கோட்பாடு.

முடிவுரை

இவ்வாறு பல்வகைச் சிறப்புக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய ஆதித் தமிழரின் மெய்யியல் பின்னர் வந்த வந்தேறி சமயங்களால் விழுங்கப்பட்டு திரிவாக்கம் பெற்று வெவ்வேறு பெயர்களுடன் உருமாற்றம் பெற்றது. இன்று ஆதித் தமிழரின் மெய்யியல் பதித்துள்ள சுவட்டின் தடங்கள் புழுதி மண்டி மறைந்து கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுத்து அறிவு நிலையில் மேம்பட்டு உயர வழிகாண வேண்டியது ஆய்வாளர்தம் கடமையும் பொறுப்புமாம்.
ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்


முனைவர் க. நெடுஞ்செழியன் வழங்கிய
அணிந்துரை

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆசீவகம் பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே. அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர். ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில் ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம் ஆவார். ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர். அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும். தருக்கவியலில் இதனை ‘அயலார் கூற்று’ என்பர். நன்னூலார் ‘பிறர் மதம் கூறல்’ என்பார். மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார்.

‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம்’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம், ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். மோரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள், தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர். அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல். பாசம்.
கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர். ஆசீவகம் பற்றிய செய்திகளை தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறிய பின்னரும் கூட ஆசீவகம் பற்றிய ஆய்வுகள் தமிழில் தொடங்கப் பெறவில்லை. இச்சூழலில்தான் உலகாய்தம் பற்றிய முனைவர் பட்ட ஆய்வில் ஆசீவகம் பற்றியும் எழுத வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக ஏ.எல். பாசம் அவர்களின் ஆய்வு நூலை மேலும் நுணுகிப் படிக்க வேண்டியிருந்தது.

ஆசீவக மரபில் கழிவெண் பிறப்பைக் கடந்து வீடடைந்தவர்களாக மூவர் குறிக்கப்படுகின்றனர். அம் மூவர் ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி கோசாலர், கிசசாங்கிசா, நந்தவாச்சா என்போராவர். இம் மூவருள் மற்கலியைத் தவிர்த்த மற்ற இருவரைப் பற்றியும் பாலி, பாகதம் முதலான வட மொழிகளில் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் அதனால் அவ்விருவரைப் பற்றியும் ஆராய முடியவில்லை எனவும் ஏ.எல். பாசம் வருத்தப்பட்டிருந்தார்.

தமிழில் ‘கழிவெண் பிறப்பு’ என்பதை நல்வெள்ளை என்பர். அந்த நிலையை அடைந்தவர்களை நல்வெள்ளையார் என்பர். அதைப் பாலி மொழியில் ‘பரம சுக்க’ என்பர். பாலி முதலான வட மொழிகளில் அவர்களைப் பற்றி யாதொரு செய்தியும் காணப்படவில்லை என்றாலும், ஆசீவகத்தின் வேர்கள் தமிழ் நாட்டில் நிலை கொண்டிருப்பதாக ஏ.எல். பாசம் கூறியிருப்பதால், கிசசாங்கிசா, நந்தவாச்சா ஆகிய இருவரைப் பற்றிய செய்திகளைத் தமிழ் மூலங்களில் தேடினேன். அப்படித் தேட முற்பட்ட போது வியப்பூட்டும் முடிவுகள் கிடைத்தன. இந்தத் தேடலில் முதலில் அடையாளம் காணப்பட்டவர் நந்தவாச்சாவே ஆவார்.

மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள மாங்குளம் கற்படுக்கைகள் கணி நந்தாசிரியன் எனும் ஆசீவகத் துறவிக்கு அமைக்கப்பட்டனவாகும். அக்கற்படுக்கைகளை அமைத்தவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் அவன் உறவினரும் ஆவர். அக் கல்வெட்டில் உள்ள நந்தாசிரியன் எனும் பெயரே நந்தவாச்சா எனப் பாலி மொழியில் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியன் எனும் சொல் ஆசான் எனவும் வழங்கும். தமிழ் ஆசான் - பிறமொழிகளில் ஆச்சாரியார் எனவும் ஆச்சான் எனவும் திரியும். பெரியவாச்சான் எனும் வைணவப் பெரியாரின் பெயரே அதற்குச் சான்றாகும். பெரிய+ஆசான் > பெரியவாச்சான் என்றானதைப் போன்றே நந்த+ஆசான் > நந்தவாசான் > நந்தவாச்சா என்று மருவியுள்ளதும் புலனாயிற்று. ஆசீவக அறிவியலான வானியலில் இவர் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததால் இவர் கணி நந்தாசிரியன் என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளதை மாங்குளம் கல்வெட்டால் அறிய முடிந்தது. இக் கணி நந்தாசிரியனே முக்கல் ஆசான் நல்வெள்ளையார் எனும் நற்றிணைப் புலவராவார். திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் என்ற ஊரில் உள்ள குன்றில் இவர் ‘முக்தி’ அடைந்ததால் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என அழைக்கப்பட்டுள்ளார்.. இன்றைய நிலையில் அங்குள்ள கோயில் முத்தியாலீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுவதுடன், மலையின் அடிவாரத்தில் ஐயனார் கோயில் இருப்பதும் பழைய வரலாற்றை உறுதி செய்யக் காணலாம்.

நந்தவாச்சாவைப் போலவே கிசசாங்கிசா என்பவரும் ஆசீவகத் துறவியாவார். திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலை கற்படுக்கைக்குரிய வெண்காயபன் என்பவரே அவர் என்பதும், நற்றிணைப் புலவர்களில் ஒருவராகிய மதுரை ஓலைக் கடையத்தனார் நல்வெள்ளையார் என்பவரே அவர் என்பதும் தெளிவாயிற்று. இவ் இருவரையும் பௌத்த இலக்கியங்கள் ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகப் போற்றுகின்றன. இம் மரபுக்கு ஏற்ப இவர்களைப் ‘பரம ஐயனார்’ என்று தமிழ் மக்கள் இன்றளவும் வணங்கி வருகின்றனர் என்பதும் ஆய்வின் வியப்பான முடிவுகளாகும். அத்துடன் பாலி மொழியில் ‘பரம சுக்க’ நிலையை அடைந்தவர்களாகக் குறிப்பிடும் மூவரையும் தமிழர்கள் பரம ஐயனாராக - பெரமநாதராக -ப் போற்றி வருவதும் கள ஆய்வில் கண்டுணர்ந்த செய்திகளாகும்.

இப்படி ஆசீவகத்தில் பரம ஐயனார்களாக மூவரும் அஃதாவது மற்கலி, காயபர், கணி நந்தாசிரியன் ஆகிய மூவருமே தமிழகத்தில் வழிபடப்பட்டு வரும் போது ஆசீவகத்தின் தோற்றுநராகிய மற்கலி மட்டும் எப்படி வடநாட்டவராக இருக்க முடியும்? இந்த வினா என் நெஞ்சை அரித்துக் கொண்டிருந்தது. வெங்காலூர்ச் சிறையில் பொய் வழக்கு ஒன்றில் தளைப்பட்டிருந்த நேரத்தில் எதிர்பாரா வண்ணம் தோழர் குணா அவர்களும் யானும் மாசாத்தனார் எனும் ஐயனாரே மற்கலி கோசாலர் என்று கண்டுணர்ந்தோம். இப்படியாக ஏறத்தாழ 30 ஆண்டு தொடர் ஆய்வில் ஆசீவகம் பற்றிய பல உண்மைகளைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் சேயாற்றிலிருந்து ஒரு துண்டறிக்கை வந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது.

மற்கலி எனும் பெயர் சேயாறு, வந்தவாசி முதலான பகுதிகளில் பரவலாகப் பிள்ளைகட்குச் சூட்டப்பட்டு வந்ததாகவும், அண்மைக் காலத்தில்தான் அந்த வழக்காறு குறைந்து வருவதாகவும் அத்துண்டறிக்கை உணர்த்தியது. இச் செய்தி ஆசீவகம் பற்றிய ஆய்வில் புதிய வெளிச்சத்தைக் காட்டியது. ஆசீவகத்தின் மூலச்சுவடுகள் சங்க இலங்கியங்களின் அடியூற்றாய்த் திகழ்கின்ற உண்மைகளை எல்லாம் கண்டுணர்ந்த பின்னரும் கூட, ‘ஆசீவகம்’ எனும் பெயர் மட்டும் புரியாத புதிராகவே இருந்தது. அது எந்த மொழிச் சொல் என்பதிலும் உறுதி செய்ய முடியாத ஒரு நிலையே தொடர்ந்தது. இச்சூழலில்தான் மற்கலி பற்றிய துண்டறிக்கையை அனுப்பி வைத்த தோழர் ஆதி. சங்கரன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை உருவாக்கியவர்கள் என் அன்புத் தோழர்கள் முகில், ஆற்றல், சரவணன் முதலானோர். அந்தச் சந்திப்பு ஆசீவகம் பற்றிய பல புதிர்களை விடுவித்தது. அந்தச் சந்திப்பின் விளைவே, ‘ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்’ எனும் இச்சிறு நூலுக்கு அணிந்துரை வழங்கும் வாய்ப்பாகும்.
ஆசீவகம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் பலருக்கும் அந்தப் பெயர் ஒரு பெரும் புதிராகவே இருந்துள்ளது. ஆ+ஜீவன் (உயிர்) என வடமொழிச் சொற்களாகக் கொண்டு அவர்கள் பொருள் விளக்கம் செய்தனர். அம் முயற்சியே அனைத்து வகையான குழப்பங்களுக்கும் காரணமாயிற்று. அந்த நெடுநாளைய குழப்பத்திற்கு ஒரு நல்ல தீர்வை இந்நூல் வழங்கியுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.

ஆசீவகம் தமிழ்ச் சொல்லே!

ஆசீவகம் எனும் சொல்லை ஆசு+ஈவு+அகம் என இந்நூலாசிரியர் பிரித்துப் பொருள் விளக்கம் தருகின்றார்.
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற் படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு - தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற் கான பெயரேயாம்என்பது ஆசிரியரின் விளக்கமாகும். விளக்கம் புதுமையானது என்றாலும் அது இலக்கண விதிக்கு உட்பட்டிருப்பது அக்கருத்தின் மெய்ம்மையை உறுதி செய்கின்றது.

உயிர்வரி னுக்குறள் மெய்விட் டோடும்எனும் நன்னூல் (164) நூற்பாவின்படிநிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியல் உகரமானது (முற்றியலுகரமும் கூட) வரு மொழி முதலில் உயிர் வந்தால் (தனக்கு இடமாகிய) மெய்யை விட்டு ஓடிவிடும்.என்பது அந்நூற்பாவின் பொருளாகும்.
‘ஆசு’ என்ற சொல்லில் உள்ள ‘சு’ ச்+உ எனப் பிரியும். வருமொழி முதலில் ‘ஈ’ எனும் உயிர் எழுத்து இடம் பெற்றுள்ளதால் இலக்கண விதிப்படி, ஆசு+ஈ = ஆசீ என்றாகும். ஈவு என்ற சொல்லையடுத்து அகம் வருவதால் முந்தைய விதிப்படி ஆசு+ஈவு+அகம் = ஆசீவகம் என வரும். திரு ஆதி . சங்கரன் தரும் இவ் விளக்கம் இலக்கண விதிப்படியும் பொருந்தி விடுவதால் அப் பெயர்க் காரணம் முழுமையாக விளக்கப்பட்டு விடுகிறது. ஆசீவகம் இடவாகுப் பெயராய் அச்சமயத்தைச் சுட்டியுள்ள உண்மை மேலும் மேலும் கூடுதல் விளக்கம் பெற்றுத் தெளிவடைதல் உறுதி.

பேராசிரியர் அரசேந்திரனிடம் இச்சொல்லின் பகுப்பு பற்றி கலந்தாய்வு செய்த போது அவர், ‘வாழ்க்கைக்கு வேண்டிய பற்றுக்கோடான உண்மைகளை வழங்கிய துறவிகள் வாழும் இடம்’ எனப் பொருள் விளக்கம் தந்தார். அத்துடன் ‘ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ’ என்ற புறப்பாடலையும் எடுத்துக் காட்டி விளக்கினார். இவ்விளக்கமும் எண்ணத் தக்கதாய் உள்ளது.

ஆசீவகத்தின் அழியாச் சின்னங்களாக ஆசிரியரால் குறிக்கப்படும்,திருநிலை,சுழற்குறி,கந்தழி,இருபுற முத்தலைக் கோல்ஐம்முக்கோணம்ஆகிய குறியீடுகள் யாவும் பிறமொழிச் சொற்களாகவோ அல்லது மொழி பெயர்ப்புகளாகவோ இல்லாமல் தனித் தமிழ்ச் சொற்களாக உள்ளன. அத்துடன் சுழல்குறி எனும் பெயர் பெரிய புதிருக்கான விடையாகவும் அமைந்துள்ளது பெரும் வியப்பாகும். இச்செய்தியைக் கண்ட அளவிலேயே தோழர் குணா அவர்கள் சுழல்குறியை உணர்த்தும் சுழற்றியமே சுவத்திகம் என வடமொழிகளில் திரிபு பெற்றிருக்க வேண்டும் எனக் கூடுதல் தகவலையும் தந்தார். இது இந்நூலின் வரலாற்றுப் பங்களிப்பு எத்தகையது என்பதை உணர்த்தும் சான்றாகும்.

கோள்நூல்

சோதிடத்திற்கு அவர் கையாளும் ‘கோள்நூல்’ என்ற சொல் வியப்பூட்டக் கூடியதாகும். மற்கலியின் கோட்பாட்டை விளக்கும் நூல் ‘அருங்கலைச் செப்பு’ என்பதாகும். அந்நூலில் ‘கோள்நூல்’ எனும் பெயர்க் காரணம் நல்ல வண்ணம் விளக்கப்பட்டுள்ளது.

நவக்கோள் கூடி நடத்து மாண்புஉவப்பின் நிகழ்ச்சி யது.
ஆய கோள்க ளாட்ட மதுவேகாய நிகழ்ச்சி யெனல்.
நன்றுந் தீது நவக்கோ ளாட்டமென்று உணர்வ தது
தோற்ற ஒடுக்கம் யாவும் கோள்கள்ஆற்ற செயலென் றுணர்.
என அந்நூல் குறிப்பிடக் காணலாம். கோள்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சோதிடம்’ அமைந்துள்ளதால் அதனைக் கோள்நூல் என வழங்குவதுதானே முறையாக இருக்க முடியும்?

இந்நூல் அளவால் மிகவும் சிறியதுதான். எனினும் மிகப் பெரிய பண்பாட்டு வரலாற்றை - ஓரினத்தின் அடையாளத்தை - மீட்டுருவாக்கம் செய்ய வல்ல அடித்தளத்தைக் கொணடுள்ளது என்பதே உண்மை. இந்நூலாசிரியர் பொறியியல் பட்டம் பெற்றவர். ஆயினும் இவரின் மொழிநடை தனித்தமிழில் இயல்பாயும் எளிதில் புரியும் படியும் அமைந்துள்ளது பெருஞ்சிறப்பாகும். இவ்வளவு அரிய செய்திகள் அனைத்தையும் தம் ஆசிரியரிடம் உடனுறைந்து கற்ற பாடங்கள் என்பதை அறியும் போது ஆசீவகம் அழிந்து விட்டது என்பது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை!

தமிழரின் ஊனோடும் உயிரோடும் கலந்து நிற்கும் ஓர் அறிவியல் மரபே ஆசீவகம். புத்தரும், மகாவீரரும் பொறாமைப் படும் அளவிற்கு ஒரு காலத்தில் மக்கள் சமயமாகவும் இது திகழ்ந்துள்ளது. சங்க காலத் தமிழரின் வாழ்வியலாகவும் சமயமாகவும் கூட ஆசீவகம் திகழ்ந்துள்ளது. எவ்வளவோ இடர்ப்பாடுகளைக் கடந்தும் அது தன்னைக் காத்துக் கொண்டு இன்றும் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருப்பதையும் இந்நூல் உறுதி செய்கின்றது.
உலகை மாற்றிப் போட்ட ஓர் அறிவியல் கோட்பாடு சார்பியல் விதியாகும். இக் கோட்பாட்டை 14 பக்கங்களில்தான் ஐன்சுடீன் முதன் முதலாக வெளியிட்டிருந்தார். ஒரு கோட்பாட்டின் வெற்றி அதன் அளவில் இல்லை. அது வழங்கும் செய்தியில்தான் உள்ளது. இந்த உண்மை இந்நூலுக்கும் பொருந்தும்.

தமிழ் இன மரபைத் தன் ஆசானிடமிருந்து கற்ற திரு. ஆதி. சங்கரன் இப்போது நமக்கு அவற்றை ஒப்படைக்க முன் வந்துள்ளார். இன்னும் பல உண்மைகளையும் அவர் தருவார். அவரைத் தமிழ் கூறு நல்லுலகின் சார்பில் பாராட்டுகிறேன். வாழ்த்துகின்றேன்.


ஆசீவகம் பற்றி....

பன்னெடுங்கால முன்பே வடவர் வருகைக்கு முன்னர் நமக்கெனத் தொன்மையாக ஒரு வாழ்வியல் நெறி இருந்தது. அதனைக் கண்காணிக்கவும் ஒழுகி ஓம்பவும் பல இடங்களில் கற்படுக்கைகளில் இருந்து மக்களுக்கு வழி காட்டியவர்கள்தாம் ஆசீவகத் துறவிகள். இவர்கள் சைனப் படுக்கைகள் உருவாவதற்கு முன்னமே கற்படுக்கைகளமைத்து அங்கிருந்து மக்களுக்கான காலநிலை மாற்றங்கள், கணியம், வானியல், மழைப்பொழிவு, வேளாண் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், இன்னோரன்ன பிற செய்திகளிலும் அன்றாட வாழ்வியல், வணிகம் முதலானவற்றிலும் அளவு, நிறை போன்ற வணிக வரைகளையும், வரையறுத்து வாழ்வியலை வழிநடத்தும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய அறிவன் கூடங்கள் பலப்பல. அவை கால வெள்ளத்தாற் சிதைந்தும், பிற மதத்தினரால் கவரப்பட்டும், பெயர் மாற்றம் பெற்றும் இன்று மக்களால் மறக்கப்பட்டு விட்டன.

இந்தத் துறவிகளே பல்லுயிர்ப் பாதுகாப்பு, கொல்லாமை, களவாமை, போர்ப்பயிற்சிகள், மெய்யியல் கோட்பாடுகள் போன்றவற்றை மக்களுக்குக் கற்பித்தனர். இந்த ஆசீவகத் துறவிகளுக்கெல்லாம் சிறந்தவராக மற்கலி என்பவர் போற்றப்படுகிறார். மற்கலி என்பதே மக்கள் வழக்கில் ‘மக்கலி’ என்று வழங்கப்பட்டு ‘மக்கிலி’ எனத் திரிந்து வழங்கப் படுகிறது. செய்யாறு பகுதியில் இந்த ‘மக்கிலி’ என்று பெயரிடும் வழக்கம் தற்போது அருகி வருகிறது.
எந்த ஒரு மதமும் அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சில தந்திரங்களைத் தன்னுள் கற்பித்து வைக்கும். இறந்தவர்கள் பிழைப்பார்கள் என்றும், பறக்கும் குதிரையில் பறந்து சென்றார்கள் என்பது போலவும் பொய்களைக் கூறி அந்த மதங்கள் தங்கள் விழுதுகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆசீவகமோ மதமாக மட்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போராடாமல் மக்களின் அன்றாட வாழ்வியலின் அடிப்படையாக அமைந்து இன்னமும் தனது இலச்சினையைத் தென்னகத்தில் - குறிப்பாகத் தமிழகத்தில் பதித்து வைத்து உள்ளது எண்ணத் தக்கது. எந்த ஒரு மதத்தினரும் தங்கள் மதச் சின்னங்களை அணிந்திருப்பதை இயல்பாகக் காணலாம். (கிறித்தவர்கள் சிலுவைச் சின்னம் அணிவதைப் போல) ஆசீவகர்கள், மலர்மேல் அமர்ந்த மங்கையின் இருபுறமும் நீரூற்றும் யானைகள் உள்ள இலச்சினையைக் கழுத்தில் அணிவது வழக்கம். (இந்த வழக்கம்தான் இன்று தமிழர்களின் தாலிக் கொடியில் கோர்க்கப்படும், மகாலட்சுமி பொட்டு என்னும் தங்க நாணயமும் கால் காசுகளின் பின்புறத்திலுள்ள நீரூற்றும் இரு யானைகளுக்கிடையில் மலர் மேல் அமர்ந்திருக்கும் பெண் வடிவமும் என்பது குறிப்பிடத் தக்கது.) அவ்வாறு, நமது தாலிக் கொடிகளில் இன்றும் புழங்கி வரும் ஆசீவக மரபு தனது ஆசீவகக் கற்படுக்கைகளையும், ஆசீவகத் துறவிகளையும் இழந்து நிற்கிறது.கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் தனது சிறப்புக் கூறுகளை இரவல் கொடுத்த ஆசீவக சமூகம் இன்று தனது சங்கிலித் தொடரின் அடுத்த வளையத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. ஆசீவகத் துறவிகளின் எச்சமாக இருக்கும் சித்தர் பீடங்கள், குருகுலங்கள் மீண்டும் தமது பணியைப் பொது நலம் கருதித் தொடர வேண்டும் எனவும், பொது மக்களையும் அரசமைப்புகளையும் குறை சொல்லிக் கொண்டு, அயனாட்டுப் பண்பாட்டு மோகம் கொண்டு அலையும் இளைஞர் சமுதாயம் தனது பொறுப்புணர்ந்து சுற்றுச் சூழல், பல்லுயிர் ஓம்பல், ஒழுகலாறு, நெறியாண்மை போன்றவற்றில் தனது கவனத்தைத் திருப்பித் தொன்றமிழ் நாட்டின் அருகி வரும் கலைகளைப் புதுக்கித் தருவதில் பங்களிப்பைத் தர வருக எனவும் அழைக்கிறோம்.

இதனை ஒப்புக் கொள்ளும் யாவரும், தமது இல்லத்தில் ஆசீவகச் சின்னங்களை வனையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆதி. சங்கரன்

அஃஉ

முன்னுரை

ஆசீவகம் என்ற சொல்லைக் கேட்கும் போதே அது ஒரு தமிழ்ச் சொல்லா? அன்றிப் பிறமொழிச் சொல்லா? என்பதிலேயே ஆய்வாளர்களுக்குப் பெருந் திணறல் ஏற்படும் அளவுக்கு ஆசீவக நெறி இன்றைக்கு அடைந்துள்ள நிலைமை தோள்மீது கிடக்கும் துண்டினை ஆள் வைத்துத் தேடுவது போல் உள்ளது. ஆசீவகம் வாழ்வியல் நெறியேயன்றிப் பிறவன்று.

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார். எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு.
ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளையாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசு+ஈவு+அகம்
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு - தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம்.
ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் ‘போதி சத்துவர்’ முதலிய பெயர் பெற்றனர்.
போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக ஆண்பாற் பெயராகும். கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. இவை பற்றிப் பின்னூற்களில் பேசுவோம். தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர்) வழங்கப் பெற்றனர்.

இவ்வாறு பல்வேறு பிரிவினராக ஆசீவகத்தினர் பெயர் பெற்றுத் தமக்குள் பிணக்குற்றுக் காலந்தோறும் மாற்றம் பெற்ற ஒழுகியல் கூறுபாடுகளைப் பின்பற்றத் துவங்கினர். காலம் என்பது சமயம் (வேளை) எனும் திசைச் சொல்லாலும் குறிக்கப்பட்டது. (ஒரு வேளை என்பது ஒரு சமயம் என்பது போல்) காலத்தால் ஏற்பட்ட ஒழுகியல் மாற்றம் சமயம் எனும் பாகுபாட்டுப் பிணக்கினைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்டு பொதுவியலில் பல்வேறு எதிர்மறைக் கருத்துக்களையும் குழுக்கள் பிரிதலையும் ஏற்படுத்தியது. இதன் பின்னரே சமயங்கள் எனும் தோல் முட்டைகள் மதங்கள் எனும் வலிய ஓடுகளைத் தம்மீது போர்த்திக் கொண்டன. பல்வேறு காலங்களிலும் பிணக்குகள் பரிணாமம் பெற்றன.

பருத்துயர்ந்த ஒரு மரம் பிளக்கப்பட்டுப் பல்வேறு பொருட்களாக மாறுவது போல் (நாற்காலி, கட்டில் போன்று) ஆசீவக மரபு தனது பொதுமையையும், தன்னையுமிழந்து பல்வேறு குழுக்களாகச் சிதறியது. மரம் என்ற பொதுமை, நாற்காலி, கட்டில் என வேற்றுமைப் பட்டது போல் குழுக்கள் சமயங்களாக உருமாறின. அப்பருத்த மரத்தினை வெட்ட உதவிய கோடரிக்கு அம்மரத்தின் கிளையே காம்பாகவும், கொடுவாளுக்குப் பிடியாகவும் இருந்து உதவியது போல் ஆசீவக மரபிலிருந்து பிரிந்த குழுக்களே ஆசீவகத்தின் முகவரியை இல்லாமற் செய்து தாமே பன்னெடுங்காலமாய் இருந்த தனிப்பெரும் பொதுமை போன்றதோர் மாயையை ஏற்படுத்தின. இவ்வாறு தன்னை யிழந்து தமது தொடரிகளாகப் பல்வேறு குழுக்களுக்கு வளர்சிதை மாற்றத்துக்கு உதவிய ஆசீவக மரபின் அழிக்க முடியாத பண்பாட்டுச் சின்னங்கள் இன்னமும் அழிக்க இயலாச் சிறப்பு நிலையில் குமுகத்தில் விரவிக் கிடப்பதனைச் சுட்டிக் காட்டி எமது மனக் கிடக்கையில் உள்ள பேரவாவினைச் சமன் படுத்து முகத்தான் இச்சிறு நூலினை யாம் யாத்தளிக்கிறோம்.

ஆதரவாளர்களுக்கு நன்றி. கருத்தில் மாறுபாடு கொண்டோருக்கு விடையிறுக்கும் பொறுப்பும் எமக்கிருப்பதால் பிணக்குகளைத் தெரிவிக்கலாம் எனத் தங்கள் மறுப்புக்களை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

நன்றியுடன்
ஆசீவகத்துறவினன்
ஆதி. சங்கரன்

1. திருநிலை

ஆசீவகச் சின்னங்களுள் மிகப் பரவலாக அறியப்படும் சின்னம் இந்தத் திருநிலை. இருபுறமும் நீரூற்றும் யானைகளுக்கிடையில் மலர் மீதமர்ந்திருக்கும் பெண் ணுருவமே திருநிலையின் பொது வடிவமாகக் கருதப் படுகிறது.

இந்தத் திருநிலைச் சின்னமே ஆசீவக மரபினர் தம் இல் வாயிலின் மேற்புறம் அமைக்கப் பட்டிருக்கும். இதனை இன்றைய மரவினைஞர்கள் கஜ இலக்குமி என்று வழங்குகின்றனர். இந்தச் சின்னம்தான் இன்றைய ஆசீவக மரபிற்குச் சான்று பகரும் ஆவணமாக உள்ளது. தென்னகத்தின் மக்கள் வாழ்வில் மனையாட்சியின் மாண்பாகக் கருதப்படும் சின்னம் தாலிக்கொடியாகும். இந்த மங்கல நாணில் கோர்க்கப்பட்டிருக்கும் கால்காசுகளின் ஒருபுறத்தில் இன்றும் இந்தச் சின்னம் பொறிக்கப்படுவதால் இந்தக் கால்காசு அணியும் நாமனைவரும் ஆசீவக மரபினைப் பின்பற்றி வந்தவர்கள் என்பது வெள்ளிடைமலை.

மேலும் கடவுளர் திருவுருவங்கள் திருவிழாக்களின்போது தேர்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுத் தெருத்தெருவாக உலாக் கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும் சிலைகளின் பின்புறம் மரத்தாலான ஒரு வளைவு சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். அதனைப் ‘பிரபை’ என்ற பிறமொழிச் சொல்லால் குறிப்பர். அவ்வளைவின் இரு புறமும் இரு யானைகள் துதிக்கையை உயர்த்திக் கொண்டிருக்கும். அந்தப் பின்புலத்தோடு கூடிய கடவுளர் வடிவம் ஆசீவகத்தோடு நமக்குரிய மரபியல் தொடர்பினைத் தெளிவுறுத்துகிறது.

கோயில்களின் பெண்கடவுளர் தனிக் கோயில் முகப்பிலும், திருமண மண்டப முகப்புகளிலும் இந்தத் திருநிலை அமைக்கப்பட்டிருக்கும் பாங்கும் இந்தத் திருநிலை எனும் ஆசீவகச் சின்னம் இல்லற வாழ்வில் இருப்போர் பயன்படுத்தும் ஒரு மங்கலச் சின்னமாக வழங்கி வந்தது, ஐயந் திரிபற நமக்குப் புலனாகின்றது. இல்லற முகப்புகளைக் கண்ணுறும் எவரும் இச்சின்னம் வனையப்பட்ட இல்லம் ஆசீவக இல்லற நெறியில் ஒழுகிவரும் இல்லம் என்பதனை உணர்த்துவதாக அமைந்தது என்பது தெளிவு.

மாதங்கமொடு பற்செல்வம் மனைதொறு னிறைந்திருக்கமாதங்கம் மலரின்மேவி மகிழ்வொடும் கனிந்துநோக்கமாதங்கம் புறத்திருந்து மாதவள்மிசை நீர்பெய்கும்மாதங்கம் கொடுசெய்நாண்சேர் மங்கலம் நன்றேநன்றே!
(மாதங்கம்(1) மா+தங்கம் = மிகுந்த பொன்(2) மாது+அங்கம் = பெண்ணின் மேனி(3) மாதங்கம் = யானை(4) பொன்னணிகொடு - கொண்டு என்பதன் தொகுத்தல் விகாரம்)
ஆசீவக இல்லத்தின் வாயில் திருநிலை என்றும், (நிலை என்ற சொல்லால் வாயிலைக் குறிப்பது இன்னும் வழக்கில் உள்ளது. சிறப்புக்குரிய வாயில் என்ற பொருள் தருவது திருநிலை என்ற சொல்.) இத்திருநிலையில் அமைக்கப்பட்ட இப்பெண்ணுருவம் மாதங்கி என்றும் வழங்கப் படும். மாதங்கி எனும் பெயர் செல்வத்திற்குரியவள் என்றும், செல்வத்தை இல்லத்தில் தங்க வைப்பவள் என்றும் பொருள் படும்.

2. சுழற்குறி


துறவு நிலையில் கொல்லாமை. அழுக்காறின்மை, அவாவின்மை இன்னபிற நற்பண்புகளை மட்டும் பெற்றுத் துறவின் இறுதி நிலையினை அடையு முன்பாக உள்ள தேடல் நிலைத் துறவி களுக்கான ஆசீவகச் சின்னமே சுழற்குறியாகும். இதனை ‘ஸ்வஸ்திக்’ என்னும் பிற மொழிச் சொல்லால் குறிப்பர். இந்த நிலையில் உள்ள துறவிகளுக்கு ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்ற அடைமொழி கொடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. இந்த அடை மொழியினை இன்றும் சிலருக்கு நாம் வழங்கி வருவது கண்கூடு. எனவே இந்தச் சுழற்குறி மெய்யியலில் தேடல் நிலையின் இறுதியில் உள்ள துறவிகளுக்கான சின்னமாகவும் இறுதிப் பொருளை அடைந்து விடும் வாய்ப்பு திண்ணம் என்ற உறுதிப் பாட்டு நிலையில் உள்ளவர்களும் பயன்படுத்தி வந்த இந்தச் சின்னம் இப்பொழுதும் நிருவாணத் துறவிகளின் சின்னமாகவும், ஓக நெறியில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ள கணபதி என்னும் துவக்கக் கடவுளின் இரு நாசிப் புழையும் இணையுமிடத்தின் அடையாளச் சின்னமாகவும் சித்தரிக்கப் படுகிறது ஆசீவக நெறியில் பின்பற்றப்படும் இச்சின்னம் இன்றும் சைனர்களும், காணாபத்தியர்களும் வணங்கும் சின்னமாக உள்ளது. ஆசீவக மரபில் உலகியல் பற்றுகளை ஒதுக்கி பேசா நிலையில் இருந்த துறவியர் சமணர் (சம+அணர் என்றால் இயக்கமற்ற அண்ணத்தினை உடையவர்; அதாவது பேசா நோன்பும் உண்ணா நோன்பும் ஆகிய நிலையில் உள்ளவர் என்று பொருள் படும்.) எனும் பிரிவினர் ஆவர். இந்த பற்றுகளைத் துறந்த தீர்த்தவிடங்கர் (தீர்த்தங்கரர்) வரிசையில் 24ஆவது துறவியான மகாவீரர் சமண நிலையினை சைனம் என்ற சமயமாக வடிவமைத்து ஒரு புதுச் சமயம் உருவாக்கினார். சமண நிலை தவிர்த்த ஏனைய ஆசீவக மரபினருக்கு ஒரு பற்றுக்கோடும் வரையறையும் தேவைப்பட்டது. அவ்வாறு வரையறை செய்யாது போனால் ஆசீவக மரபு அடையாளம் காட்டப்படாமல் போகும் என்ற நிலை உருவானது. அந்த காலக் கட்டத்தில்தான் மற்கலி என்ற ஆசீவகத் துறவி ஆசீவக மரபினை தனித்து அடையாளம் காட்டும் முகத்தான் ஒரு சமய வரைவுக்கு உட்படுத்தினார். இதனை ஆசீவக சமயத்தினை மற்கலிதான் உருவாக்கினார் என்று வரலாறு தவறாக சுட்டுகிறதே ஒழிய உண்மையில் மற்கலியார் ஆசீவகத்தை ஒரு சமயமாக வரைவு படுத்திக் காட்டுவதற்கு முன்னமே ஆசீவகம் ஒரு மரபியலாக இருந்தது என அறிய வேண்டும். ஆசீவகக் கற்படுக்கைகளைக் கைப்பற்றியவர்கள் தமது சின்னமாக எதனையும் அடையாளப் படுத்தா விட்டாலும், இந்தச் சின்னம் அவர்கள் மீதும் தனது இலச்சினையைக் குத்திவிட்டது என்பது உன்னுந்தொறும் வியப்பளிக்கவே செய்கிறது.ஆகச் சைனம், காணாபத்தியம் என்னும் பிற்காலச் சமய மரபுகள் தோன்ற ஆசீவகமே கால்கோளிட்டது.

3. கந்தழி

ஒரு நடுவப்புள்ளியில் துவங்கி வலஞ்சுழியாக வரையப்பட்ட சுருள்வளைவே இந்தக் கந்தழி என்னும் ஆசீவகச் சின்னம். உலகியலைக் கடந்து மெய்ப் பொருளைத் தேடி அலையும் இயக்கநிலையினைக் குறிப்பது இந்தக் கந்தழியாகும். கணக்கியலில் உள்ள எண்ணிலி நிலை (infinity) யினைக் குறிப்பதாகவும் இது கருதப்படுகிறது. இந்தச் சுருள் வளைவு எல்லையின்றிப் பரந்து விரிந்து கிடக்கும் அண்ட வெளியினுள் நிகழும் பல்வேறு தொடர் இயக்கங்களின் முடிவில்லா நிலையினையும் குறிப்பதாக உள்ளது.

வைணவத்தில் மாலவனின் வலக்கரத்தில் அமையப் பெற்ற சின்னமாகவும் இதனைக் குறிக்கின்றனர். மேலும் ஆற்றல்களின் நிலையினையும், அவற்றின் தொழிற்படு செயல் பாங்கினையும் குறிப்பதான இந்தச் சின்னம், பண்டைக் காலப் பொறியியல் கருத்துக்களில் அழிக்க முடியாப் பெரும் பேராற்றல்களைக் குறிக்கும் ஒரு சின்னமாகக் கருதப்பட்டது. அக்காரணம் பற்றியே கந்தழி என்னும் சொல் தொடர் ஆற்றல் நிலையினைக் குறிக்கப் பயன்பட்டது. சுருள் வில்லாக வரையப் பட்ட கந்தழி வரைவு எளிதின் பொருட்டு வட்டப் பரிதி ஆகவும் ஆரைகள் சேர்த்தும் வரையப் படுவதும் உண்டு.

இல்முயல்வோனும், மாணவனும், பொருள் முயல்வோனும் இந்தச் சின்னத்தினைப் பொருத்தி ஒழுகினர் என்பதே இச் சின்னத்தின் சிறப்பினை நமக்குத் தெளிவுறுத்துகிறது.

4. இருபுற முத்தலைக் கோல்

ஆசீவக மரபினர்தம் இல்லங்களிற் காணக் கிடக்கும் மேலும் ஒரு முதன்மைச் சின்னம் இருபுற முத்தலைக்கோல் ஆகும். வீட்டு வாயிலின் இருபுறமும் படத்தில் உள்ளது போல் வரையப்படும் இந்தச் சின்னம் ஒவ்வொரு ஆண்டும் வடசெலவு துவங்கும் சுறவத் திங்களின் முதல் நாளில் புதுப்பிக்கப்படும். அவ்வழக்கமே இன்றும் போகிப் பண்டிகையன்று வெள்ளையடிக்கப் பட்ட சுவரில் இந்தக் குறியீட்டுச் சின்னத்தினை தமிழக மக்கள் வரை கின்றனர். இதில் வருந்தத் தக்க செய்தி என்னவெனில் பேரில்லங்களில் இந்த நிலை அருகி சிறு குடிசைகளிலும் ஊர்ப்புற வீடுகளிலும் மட்டுமே இதனை இன்றைய மக்கள் வரைகின்றனர்.
இக்குறியீட்டின் மேல் முனையிலுள்ள ‘ய’கர வடிவம் உயிர் ஓம்பலைக் குறிக்கிறது. இச்சின்னத்தின் கீழ் முனையில் தலைகீழாக உள்ள ‘ய’கரம் தக்க காரணத்திற்காகத் தண்டிக்கும் கொலைக் கருவியாக அறியப்படுகிறது. முல்லை நில மக்கள் தமது பசுக் கூட்டங்களைக் காப்பதற்காக இந்த முத்தலைக் கோலைக் காவல் சின்னமாகவும், வன விலங்குகளையும், கள்வரையும் கொல்லுமிடத்து இதனைக் கொலைக் கருவியாகவும் மதிக்கின்றனர். இம் முத்தலைக் கோலில் நடுவ முனை பகைஞர் குருதியைச் சுவைக்கும் அடையாளமாகவே செந்நிறந் தீட்டப்பட்டுக் காட்டப் பெற்றது. இதுவே மாலவன் வழிபாட்டின் அடையாளமாக (நாமமாக)க் கருதப்படுகிறது. உயிர்களைக் காக்கும் மேல்நோக்கிய முனை சிவன் வழிபாட்டில் சிவசின்னமாகவும், பகைஞரைக் கொல்லும் கீழ் நோக்கிய முனை கொற்றவை வழிபாட்டில் கொற்றவையின் கீழ் நோக்கிய முத்தலைக் கோலாகவும் அறியப்படுகின்றது. வெண்கலத்தாலான கைச்சிலம்பிலும் இக்குறியைக் காணலாம். ஆசீவக மரபினரின் இல்லத்திற்கு வருகை தரும் பல்தரத்தோர்க்கும் இது ஒரு எச்சரிக்கைச் சின்னமாகவும், துறவிகளுக்கான ஓம்புதல் நிகழ்த்தப்படும் ஒழுக்கம் கொண்டவர்களின் வாழிடம் எனவும் அறிவிக்கும் அறிவிப்புச் சின்னமாகவும் இது பயன்பட்டது. கோவில் சுவர்களில் பல்லியின் வடிவம் போன்று உள்ள அமைப்பும் இச்சின்னமே.
பண்டைத் தமிழகத்தின் ஐவகை நிலத்திலும் யாண்டுங் காணப்பெறாத சிவன் வழிபாடு ஒரு ஓக நிலைத் தத்துவமே. இதில் ‘வளிமுதலா எண்ணிய மூன்று’ என மாதாநுபங்கியார் சுட்டிய மூலநாடி மூன்றையும் அவை கூடி நின்று மெய்ஞ்ஞானம் பெறும் நிலையினையும் குறிக்கும் ஒரு அடையாள வரைவே சிவ வழிபாடு. இதனை நச்சி ஓம்பியோர் ஆசீவக சின்னங்களைக் குலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் வெளிப்பாடே ஆசீவகத்தின், ‘துதிக்கையை உயர்த்திய யானை’யினைச் சிவன் தோலுரித்ததாகக் கதைக்கப்பட்டது. ஆனால் பண்டைத் தமிழகத்தின் முல்லை நில மக்களிடம் வழிபாட்டிலிருந்த மாலோன் வணக்கத்தினர் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் யானையினைத் திருமால் தமது படைக்கலத்தால் (கந்தழியால்) காத்ததாகக் காப்பியம் கூறினர். இதுவே மரபுகள் மாறி மதம் தோன்றிப் பிணக்குகளை உருவாக்கியதற்குச் சான்று.

ஓக நெறியினை நாடிய பல துறவிகள் தமது கையில் ‘தண்டு’ எனும் கருவியை வைத்திருந்ததாக அறிகிறோம். இதுவும் நடுத்தலையில்லாத முத்தலைக்கோலின் எச்சமே என்பது காண்டற்றகும்.

இருபுற முத்தலைக்கோலின் மேற்புறம் சிவனுக்கும், கீழ்ப்புறம் கொற்றவை வழிபாட்டின் காலமுறை வளர்ச்சி பெற்றிட்ட காளி, சக்தி, என்று வழங்கப்பட்ட பெண் கடவுளர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இக்காரணம் பற்றியே சக்தியும் சிவனும் இருபாதி ஒன்றாக இணைந்த வடிவினர் என வழங்கப்படுகிறது. ஓக நெறியில் கதிர், மதி எனும் இரு மூச்சுக்களும் வெவ்வேறாகப் பிரிந்து செயல்பட்டாலும் சுழுமுனை எனும் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.
ஆக ‘சாக்தம்’ ‘சைவம்’ எனும் இரு வழிபாடுகளும் ஆசீவகத்தின் சின்னத்தையே அடையாளமாகக் கொண்டு எழுந்தன. வைணவமும் முத்தலைக் கோலையும் கந்தழியையும் கொண்டே எழுந்ததாகப் புலனாகின்றது.

5. ஐம்முக்கோணம்

ஆசீவகம் மாந்தர்கள் மட்டுமின்றிப் பல்லுயிர் வளன் பற்றியும் அக்கறை கொண்டிருந்தது. பண்டைய நாட்களின் செல்வவளம் ஒருவரது விளைநிலம், மனை சார்ந்த சொத்துக்களை விட அவர்களிடமிருந்த பசுக் கூட்டங்களைக் கொண்டே அளவிடப்பட்டது. செல்வத்தை மாடு எனும் சொல்லால் குறிப்பர். செல்வத்தை மதிப்பிடும் அளவுகோலாக வரையறைப் படுத்தப் பயன் பட்டதால் பசுக் கூட்டங்களும் மாடு என்ற சொல்லால் பயன்படுத்தப்பட்டன. ஒரு மாடை இருமாடை எனப் பொன்னிறையைக் கூட மாடு எனும் சொல்லின் வேர்ச்சொல்லையுடைய சொல்லால் குறித்தனர்.

அத்தகைய கால்நடைகளுக்குத் திடுமென ஏற்படும் பேரழிவு தரத்தக்க நோய்களுக்கு ஐந்திறமிக்க மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் செய்வதுடன் அவ்வாறு செறிவூட்டப் பட்ட மருத்துவம் செய்யப்பட்ட கொட்டிலில் வெளியிடங்களிலிருந்து கொண்டுவரப்படும் கால்நடைகளை நோய் அச்சமின்றி அடைத்து வைக்கலாம் என்று தெரிவிக்கும் சின்னமாக ஐந்து முக்கோணங்கள் ஒரு நேர் வரிசையில் வரையப்படும். ‘தற்போது கூட ஊர்ப்புறங்களில் மாட்டுப் பொங்கலன்று மாடுகள் நீரருந்தும் தொட்டியிலும், கொட்டில்களிலும் இச்சின்னத்தினை வரைவதனைக் காணலாம். கால்நடை மருத்துவத்தில் ஐம்பூதக் கலப்பும் செறிவும் சரியான படிக் கண்காணிக்கப் படுவதனை இவ்வைந்து முக்கோணங்கள் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கோமாரி (கோமாற்றி) என்ற நோய் வரும்போதெல்லாம் ஊர்ப்புற மக்கள் இந்தச் சின்னத்தினை மாட்டுக்கொட்டிலில் இன்றும் வரைகின்றனர். இதனைக் கோமாறி எழுதுதல் என்று சேயாறு பகுதியில் வழங்குகின்றனர். இச்சின்னம்பற்றி விரிக்கிற் பெருகும். ஆதலால் இவ்வளவில் நிற்கிறோம். முக்கோணங்கள் நேர் வரிசையில் மட்டுமின்றி தலைகள் ஒன்றோடொன்று பொருந்தியவாறும் வரையும் வழக்கமும் இருந்தது.

6. முப்புள்ளி

அஃஉ எனும் குறியீடு கொண்டது இச்சின்னம்.
மொழி நூலில் அகரமே உயிர் எழுத்துக்களின் ஆதியாகவும், இயக்கமற்ற மெய்யெழுத்துக்கள் யாவும் உகர ஒலிக் குறிப்புடன் ஊர்ந்து ஒலிக்கப்படுவதாலும் (எடு. ‘க்’ எனும் எழுத்து ‘க்கு’ என உகரம் சேர்த்து ஒலிக்கப்படுவது.) அகர உகரத் தொடர்பே மொழி, அசைவு, இயக்கம் ஆகியவற்றுக்கு அடிப்படையாய் உள்ளதால் இச்சின்னத்தின் குறியீடு சிறப்புடையதாகும்

தமிழ் மொழியில் உள்ள இகரம் இம்முப்புள்ளியை ஒத்த ஒரு ஓகக் குறியீடே. இகரத்தில் ‘இ’ என்று எழுதும் போது மூன்று வட்டப் புள்ளிகள் அமைவதைக் காணலாம். ஆனால் இகர நெடிலாகிய ‘ஈ’ காரத்தில் தலைப்புப் புள்ளி தவிர்த்து ஏனைய இரு புள்ளிகளும் பயின்று வருகிறது. ஏனைய உயிர் எழுத்துக்கள் யாவும் ஒரு வட்டத்தினை ஆதியாகக் கொண்டே எழுதப் படுகின்றன. அதாவது உயிர் எழுத்துக்களை எழுதத் துவங்கும் போதே ஒரு முழு வட்டம் போட்ட பிறகே எழுத இயலும். கவனிக்க: அ,இ,ஊ,ஏ,ஐ,ஓ போன்று. முதலில் வட்டம் வரைந்தால்தான் உயிர் எழுத்துக்களை எழுத இயலும். இது அண்ட (முட்டை) இயக்கத்தினைக் குறிக்கிறது. இயக்கம் தருபவை உயிர் எழுத்துக்களே. மெய்யெழுத்துக்களும் எண்ணுப் பெயர்களும் உகர ஒலியில் முடிகின்றன. சுழியம், ஆயிரம், இலக்கம், சங்கம், பதுமம், கோடி இன்னோரன்ன முழு வடிவங்கள் தவிர்த்து ஏனைய எண்ணுருக்கள் உகர ஒலியிலேயே முடிதல் காண்க. (எடு.) ஒன்று, இரண்டு,ஆக, உயிரும் மெய்யும் இரு புறமும் நிற்க, உயிர்ப்பும் ஞானமுமாகிய முப்புள்ளி இடையில் நிற்கும். இக்குறியீட்டின் சிறப்பு விவரித்தலரிது.

ஓக நெறியில் கதிர், மதி, சுடர் எனும் மூன்றையும், வளியில் இடை, பிங்கலை, சுழுமுனை எனும் மூன்று நிலைகளையும் இம்முப்புள்ளி குறியா நின்றது.
கௌமார சமயம் என அழைக்கபடும் குறிஞ்சி நிலத்துக் குமர மதத்தில் முருகனது கை வேலாக நிற்கும் படையும் இம்முப்புள்ளியின் பொது வரையறையாகும். குமர மதமும் ஆசீவத்திடம் இதனை இரவல் பெற்றே எழுந்தது.தமிழ் மொழியில் உள்ள ஆய்த எழுத்தினை ஒத்த இச்சின்னம் ஞானம் கூடும் நிலையினை அதாவது இயல்பான இரு கண்களுடன் மூன்றாவதாக அறிவுக் கண் பெறும் நிலையினைக் குறிக்கும். எனவே, இந்த நிலை தனிநிலை (சிறப்பு நிலை) எனப்பட்டது. இந்த முப்புள்ளிக்கு முன்னதாக அகரத்தையும் பின்னதாக உகரத்தையும் சேர்த்து எழுதும் முறை பொது வடிவமாகும்.

ஆசீவக மரபில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் இருப்பிடம் இக்குறியீட்டாலேயே சுட்டப் பட்டது.
எதனையும் எழுதத் துவங்கும் முன் ஓலைகளிலும் தாள்களிலும் இச்சின்னத்தைப் பதிவு செய்த பின்பே எழுதும் முறை உண்டு. சில காலத்திற்கு முன்பு வரை தொடர்ந்த இவ்வழக்கம், அம் முப்புள்ளிக்குப் பின்னால் வரும் உகரத்தை மட்டும் தலைப்பில் எழுதித் துவங்கும் முறையாகக் குறுகி விட்டது. இதனைத் தற்போது பிள்ளையார் சுழி என்று வழங்குகின்றனர்.

பிள்ளையார் சுழியுடன் எழுதத் துவங்கும் யாவரும் ஆசீவக மரபில் வந்தவர்களே என்பது தெளிவாகிறது.

7. புள்நகக் கீற்று

பறவையின் நகத்தினைக் கொண்டு ஒரு இளக்கமான பொருளில் கீறல் ஏற்படுத்தினால் எவ்வாறு அந்த வடு அமையுமோ அதனை ஒத்த வடிவம் கொண்ட குறியீடு இது. ஏர்க்கலப்பை கொண்டு நிலத்தில் உழும் போது ஏற்படும் சால் உழவின் வடிவையும் ஒத்தது. இருபுறப் பட்டைகளிலும் வழவழப்பும் ஆழ்ந்த கூர்முனைப் பள்ளம் கீறல் தெளிவாகவும் அமைந்திருக்கும். ஆசீவகத் துறவு நிலைப் புகும் மாணவர்கள் உயிர்நூல் அறியும் முகத்தான் குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூவகை நிலங்களிலும் பயணிக்கும்போது அவர்தம் ஆய்வுக்காக எவ்விடம் செம்மையான நடுவமாக அமையுமோ, அங்குள்ள கற்பாறைகளில் இவ்வடிவம் செதுக்கப்பட்டது. சிற்சில இடங்களில் புள்நகக் கீற்று இரண்டு அல்லது மூன்றாகவும், முக்கோணம் சேர்த்தும் வரையப்படுவதுண்டு. இத்தகைய கற்பாறைகளிலிருந்து சேய்மைத்தான உயிரியக்கங்களையும் ஆயும் ஏந்து இருந்ததாலே இவ்விடங்கள் இக்குறியீட்டால் அடையாளப் படுத்தப் பட்டன. நமது சேயாறு பகுதியில் உக்கல் என்ற ஊரின் ‘ஆனைக்கல்’ என வழங்கும் பாறையின் மீது இவ்வடிவம் உள்ளது. இக்கல்லின் பெயரே இவ்விடத்தின் ஆசீவகத் தொன்மையைத் தெளிவுறுத்துகிறது. திருக்கழுக்குன்றத்தின் மலையுச்சியில் கழுகு தன் அலகைத் தேய்த்த இடம் என்று சொல்லபடும் இடம் உண்மையில் புள்நகக் கீற்று அமைந்துள்ள இடம்தான்.

முடிவுரை

ஆசீவகக் கடலினின்றும் சிதறிய ஒரு துளி. மீண்டும் தன் பழைய வடிவம் பெறத் துடிக்கிறது. எமது உணர்வுத் துடிப்பினுக்கிடையில் இழையோடும் தொன்மை அவா தங்களையும் பழைமை உண்மையின் பக்கம் பற்றி இழுக்கும் என நம்பி விடை பெறுகிறேன். நன்றி.

கணியம் எனும் சோதிடம் அறிவியலா? மூடத்தனமா?

சித்தர் பெருமக்களின் இரக்கத்தினால் இயங்கும் புவியுயிர்ச் செயல்பாடுகளில் “கோள்நூல்” எனப்படும் சோதிடம் என்பது பாமரத் தனமான மூட நம்பிக்கையா? அல்லது இயற்கையின் ஆணைக்கொப்ப இயக்கப்படும் ஒரு ஒழுங்கான நிகழ்வமைப்பா என்பதே இங்குக் காணப் போந்த கருத்தாகும்.
முதற்கண், கோள்களின் இயக்கங்களை வரையறைப் படுத்திக் காணுகையில் ஒவ்வொரு கோளுக்கும் இயல்பே அமைந்ததான வடிவம் கோள வடிவமாகும். கோள் எந்த வடிவத்தை உடையதாக உள்ளதோ அவ்வடிவம் “கோளம்” எனப்பட்டது. கோள வடிவம் எனவும் வழங்கத் தலைப்படலாயிற்று. புவியின் வடிவம் கோளம் என்று “கோபர்நிகஸ்” என்ற மேனாட்டு இயற்பியல் அறிஞர் அறிவதற்கு முன்னதாகவே புவி மட்டுமின்றி ஏனைய கோள்களும் உருண்டை வடிவம் கொண்டவையே என மாணிக்க வாசக சுவாமிகள் பாடியுள்ளார்.
“அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்...”(திருவண்டப் பகுதி, திருவாசகம்)
தொன் தமிழ்ச் சான்றோர் கோள்களின் பாதைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றின் விளைவுகளாய “ஒளி மறைவு” (கிரகணம்), பருவ கால மாற்றங்களை முன் உரைத்தமை யாவரும் அறிந்ததே.
இனி சோதிடம் எனப்படும் கோள்நூல் பற்றி ஆயுங்கால், ஒவ்வொரு மனிதனின் பிறப்பியமும் அவன் பிறந்த நேரத்தின் கோள் அமைப்பை 3600 பாகை கொண்ட நீள் வட்டத்தின் அமைப்பில் குறிப்ப தாகும். (நீள்வட்டம் வரைதல் கைப்பழக்கத்தில் திரிபுற்று நீள் சதுரத்தில் தற்போது வரையப்படுகிறது.) இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டங்கள் பன்னிரண்டும் (பன்னிரண்டு இராசிகளாக) ஒவ்வொன்றும் 300 பாகையை உள்ளடக்கி அமைகிறது. பிறப்பியத்தில் குறிக்கப்படும் இலக்கினம் என்பது பிறந்தோரின் அண்ட இருப்பு நிலையைக் குறிக்கும். (அதாவது இந்தப் பேரண்டம் 360 பாகைகளில் பிரிக்கப் படும் போது இந்த உயிர் பிறந்த இடம் மற்றும் கோளமைவு அமைந்த இடம் எத்தனையாவது பாகையில் அமைந்தது என்பதைக் குறிக்கும்.

மேலும் ஆய்கையில், ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறம், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக்கதிர்களுண்டு. அவற்றின் அலை நீளங்களும் ஒளிச் சிதறல் தன்மைகளும் வேறுபட்டவை யாகும். (சனிக் கோள் கருநீல நிறத்துக்கும், செவ்வாய்க் கோள் செந்துவர் நிறத்துக்கும் உரியனவாதல் இதற்கு எடுத்துக் காட்டாகும்.) பிறப்பியத்தில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை உமிழ்ந்து கொண்டுள்ளன. அவை முறையே அமைந்த இடத்தால் பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன. பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் தொகு பயனாகப் புது விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக் கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் உச்சம் பெற்றதாக உரைக்கப்படும். இதைத்தான் “கிரக வலிமை” என்பர்.

ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும். இதனையே “வக்ரம்” எனக் குறிப்பிடுவர். எதிர்ப்புலம் கொண்ட கோள் பகுதிகள் உடைந்து சென்று மறுகோளை நோக்கிச் செல்லும். இப்பகுதிகளின் தாக்குதலால் சிறுசிறு பகுதிகள் அழிவதுண்டு. பெரும்பாலும், வளிமண்டல எல்லைக்குள் படும் துகள்கள் எரிந்து போய்விடுகின்றன. இவையே விண்கல் அல்லது எரிகற்கள் விழுவதாகவும் கூறப்படுவதுண்டு. எப்படியிருப்பினும், கோளியக்க எதிர் விசையால் இயற்கைச் சமநிலை தவறாது “கோள் சமனிலை” பாதுகாக்கப் படுகிறது. இதன் தொடர் நிகழ்வுகள் விரிக்கின் பெருகும் என அஞ்சி விடுக்கிறேன்.

இனி சோதிடம் என்பது எவ்வாறு ஒரு மனிதனை ஆட்சி செய்யும் எனக் காண்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் தலை வட துருவமாகவும், கால்கள் தென் துருவமாகவும் அமைகின்றன. (எனவேதான் தலையை வடக்குப் பக்கம் வைத்துப் படுக்கக் கூடாதெனப் பெரியோர் கூறுவர். ஏனெனில், ஒத்த தன்மையுடைய காந்தத் துருவங்கள் விலகும். இதனால் ஏற்படும் விலக்கு விசை மூளையில் மென்மையான அழற்சி மற்றும் தகைவின்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு நிலைப் படுத்தப்படுகிறது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. நாம் பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீசல்கள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து என்ன வலிமையுடன் பெறப் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது. எவ்வாறெனில் ஒரு புகைப்பட வீழ்த்தியில் (காமிரா) படச்சுருளில் பதியும் முதல் ஒளி (எக்ஸ்போசிங்)யின் வடிவமே அதில் நிலைப்படுத்தப்பட்டுப் பெரிதாக்கப் படுவது போல் நாம் பிறந்த வேளையின் கோளமைப்பு, அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மந்தமாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நமது பிறப்பிய காலத்தின் உயிர்க் காந்தப் புலமும் கோள் நிலைகளால் அமைக்கப்படுவது இதனால் தெளிவாகும்.
இனி வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும். அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனைக் கணித்துக் கூறுவதே கணியம் என்கின்ற சோதிடமாகும். இவ்வளவு பெரிய அறிவியலை சிந்தனா சக்தியும், கல்வியறிவும் இல்லாத பாமரர் சிலர் கொச்சையாகப் பயன்படுத்திப் பொருளீட்ட முனைந்து விட்டதால் “கோள்நூல் அறிவியல்” மக்களிடையே தனது மதிப்பை இழந்து மூட நம்பிக்கையாகக் கருதப் படுகின்றது.

இக்குறையினைக் களையத் திறன் சார்ந்த சிந்தனையாளர்கள் இத்துறைக்கு வருவதே இதற்குத் தீர்வாக இருக்கும் என்ற எம் விழைவு கூறி முடிக்கிறோம். மேலும், விரிவான விளக்கங்கள் எமது “காஸ்மிக் கதிர்களும் கடுவெளிச் சித்தரும்” எனும் நூலில் காண்க.

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்
வெளியீடு: க
ஆதி. சங்கரன்
திருவள்ளுவராண்டு 2039 கும்பம் திங்கள்
ஆயிரம் படிகள்
அச்சீடு :ஒளவை அச்சகம், மங்கலபுரம், மாத்தூர் அஞ்சல்-631701பேசி: 9443176764
கிடைக்குமிடம் :கோரக்கர் சித்தர் பீடம்மூலை ஆற்றங்கரை, வேளியநல்லூர்,சேயாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.பேசி: 9245712491
பத்து உருவா.